*வசந்த அலுவிஹார தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி தற்போது உறுதியாகிவிட்டது என்று ஐ.தே.க.மாத்தளை தொகுதி அமைப்பாளரும் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து ஐ.தே.க.தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து விட்டு அதன் பின்னர் மாத்தளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
"இன்றைய அரசு கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களை வெவ்வேறாக பிரித்து அவர்களிடையே பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதை கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
அவர்கள் தொன்றுதொட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைப் போன்றே ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். ஷ்ரீ.ல.சு.க.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுமானால் தமது ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்துகொண்டுள்ள இம்மக்கள் ஐ.தே.க.வை வெற்றி பெற செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பதை அவர்களுடன் உரையாடிய போது காணமுடிந்தது.
கிழக்கு மாகாண சபை தேர்தலின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு ஹெலி கூட வழங்க மறுத்த இன்றைய அரசு தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது அமைச்சர்கள் பலரும் அங்கு படையெடுத்து இரவோடிரவாக பல்வேறு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்கின்றனர்.
ஆளும் கட்சி அமைச்சர்கள் - அரசியல் பிரமுகர்கள் அனைவருமே கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊடகங்கள் அனைத்தையுமே தேர்தல் பிரசார வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஷ்ரீ.ல.சு.க.மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சியினரும் ஒன்று கூடி ஐ.தே.கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசார நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். எமது கட்சியின் முதன்மை வேட்பாளரான ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட விமர்சித்து வருகின்றனர்.
வட,கிழக்கு மாகாணம் அன்று முதல் இன்றுவரை சிறுபான்மை சமூகங்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஒரு மாகாணமாகும். அதனை இல்லாதொழிக்கும் முயற்சியினையே இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இது சிறுபான்மை சமூகங்கள் இடையேயும் மோதலை உண்டு பண்ணி வரும் அதேசமயம் ஒவ்வொரு சிறுபான்மை சமூகங்கள் இடையேயும் கலவரங்களையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி மற்றுமொரு இன மோதல்களை உருவாக்கும் முயற்சியில் இன்றைய ஆட்சியாளர்கள் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் தமது தாயகபூமியை காப்பாற்றிக்கொள்ளவேண்டுமெனில் கட்டாயமாக இத்தேர்தலில் ஐ.தே.க.வை வெற்றி பெறக் செய்ய வேண்டும். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.
ஐ.தே.க.வை வெற்றிபெறச் செய்வதன் மூலமே தமது தாயக பூமியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டு அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவ நல்லுறவுடனும் வாழ முடியும் என்பதை கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஐ.தே.க.வெற்றி இன ஒற்றுமையை எடுத்துக் காட்டும் ஒருவெற்றியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப் போவதை ஆட்சியாளர்கள் எத்தகைய சதி முயற்சியை மேற்கொண்டாலும் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.