யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த பொருளியற்துறைப் பேராசிரியர் செல்வரட்ணம் இராஜரட்ணம் தனது 80 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.
ரொனி இராஜரட்ணம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், 1950 களில் பேராதனைப் பல்லைக்கழகத்தில் விரிவுரையாளராகவிருந்து பல கல்விமான்களை உருவாக்கினார்.
1978 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாக வந்த இவர், அவ்வருடமே பல்கலைக் கழகத்தின் முதலாவது வணிக முகாமைத்துவத்துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து பொருளியற்துறை ஆரம்பிக்கப்பட்டபோது, அத்துறையின் முதலாவது தலைவராக இருந்த பெருமையும் இவரையே சாரும். அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாகவும் இவர் சிறிதுகாலம் கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை, கிழக்கிலங்கையில் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் முதற்தலைவராக இருந்து செயலாற்றிய பெருமையும் இவரையே சாரும்.
யாழ்.பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறைப் பேராசிரியர், பொருளியற் துறைத் தலைவராக இவர் இருந்த காலத்தில் அத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியிருந்தார் என்று யாழ்.பல்கலைக்கழகப் பொருளியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களாக இருப்போரில் பலர் இவரிடம் கல்வி கற்று உயர்ந்தவர்களே என்றும் அவர் தெரிவித்தார்.