எம்.ஏ.எம்.நிலாம்
தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
தரம் குறைந்த அரிசியை சந்தைப்படுத்த எந்தவொரு வியாபாரிக்கும் இடமளிக்கப்படமாட்டாது. மோசமான அரிசியை விற்கும் கடைகளை சுற்றி வளைத்து அந்த வர்த்தகர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர்கள் விடயத்தில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் காட்டப்படமாட்டாது. கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
மக்கள் தாம் உழைக்கும் பணத்தில் நல்ல அரிசியையே கொள்வனவு செய்ய விரும்புகின்றனர். அந்த மக்களை ஏமாற்ற அரசு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், தேவையான அளவு அரிசியை கையிருப்பில் வைத்திருப்பதற்காகவே ஆகும். எதிர்காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட அரசு இடம் வைக்காது.
வர்த்தகர்கள் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை கொள்ளையடிக்க இந்த அரசு ஒரு போதும் துணை போகாது எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.