* தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு
இலங்கை அரசு நாளை மறுதினம் சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் உட்பட அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களும் ஒன்று சேர்ந்து அரசுக்கெதிராக வாக்களித்து அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தி பேரினவாதிகளின் எதிர்கால சூழ்ச்சி திட்டங்களை தோற்கடிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கற்பனை உலகில் சஞ்சரிக்கும் இந்த அரசாங்கம் போலியானதொரு தேர்தலை நடத்தி வெளி உலகிற்கு தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ளத் துடிக்கின்றது. இப்போது உள்ள சூழ்நிலையில் கிழக்கில் ஜனநாயக முறையிலான தேர்தல் ஒன்றை நடத்த முடியாதென தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவருமே ஒருமித்து கூறியிருந்தனர். அதுமட்டுமன்றி மூவின மக்களின் முக்கிய பெரும் கட்சிகளான தமிழ் அரசுக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி என்பனவும் அரசின் இம் முடிவை ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன. இருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளது.
சர்வதேச ரீதியாக தம்மை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்து வரும் அரசின் நிலைப்பாட்டிற்கு ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்தி படிப்பினை ஒன்றை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் பேசும் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்காது வாக்களிப்பில் கலந்துகொண்டு ஆட்சி மாற்றத்திற்கான சூழலை உருவாக்கி அரசின் இறுதிப் பயணத்திற்கான அத்திவாரத்தை இடவேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடாகும்.
கிழக்கின் இப்போதைய சூழலில் கட்சிகளோ அன்றி அரசியல் தலைவர்களோ சுயாதீனமாக தேர்தல் பணிகளை செய்ய முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. தமது மாவட்டத்தில் அலுவலகங்களை இயக்க முடியாது. வீதியோரங்களில் அரசின் ஆசீர்வாதத்துடன் ஆயுதக் குழுக்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுற்றி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன், அண்மைக் காலமாக கிழக்கில் முஸ்லிம் மக்களது காணிகள் மற்றும் ஏனைய உடைமைகள் பேரினவாத நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. யுத்த சூழ்நிலையாலும், கடல்கோளின் தாக்கத்தாலும் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் பல்லாயிரக் கணக்கில் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கிழக்கில் வாழும் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கிழக்கின் விடியல் என்ற போர்வையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு இதுவரை அரசு பதிலளிக்கவில்லை.
இப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை. உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டும் இவை தொடர்பில் குறைந்தபட்சம் இம்மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட நஷ்டஈட்டினை வழங்க முன்வரவில்லை.
தங்களுடைய வாழ்வாதாரத்தை தொலைத்து கூழுக்கும் கஞ்சிக்கும் அல்லல்படும் எம் மக்களின் அவல நிலையை இச் சிங்கள பேரினவாத அரசாங்கம் ஒருபோதும் கண்டுகொண்டதில்லை. இதை விடுத்து எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமது சுய இலாபம் கருதி இத்தேர்தலை இரும்புக் கரம் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்குள் திணித்துள்ளது. இதை நாம் நன்கு புரிதல் அவசியம். எமது கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம், உட்கட்டுமானம், அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. மக்களின் உள்நாட்டு சுயதொழில்களான விவசாயம், மீன்பிடி, சிறுகைத்தொழில் போன்ற வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இத்தேர்தல் மக்களுக்குப் போலியான ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்யும் இச் சிங்கள அரசின் கபட நாடகம் என்பதை நாம் உணர வேண்டும்.
கிழக்கு எமது தாயக பூமி. இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. பலநூற்றாண்டு காலமாக எமது தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்வீக பூமி இது. ஒரு வகையில் சிங்கள அரசின் சூழ்ச்சியால் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கின்றது. பிரதேச வாதம் எனும் கருவியை கையில் எடுத்தும், தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான சில முரண்பாடுகளை வைத்துக்கொண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து அதில் குளிர் காய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. இந்த நிலையில் கிழக்கின் தமிழ் பேசும் சமூகங்கள் கடந்த கால பகையுணர்வுகளை மறந்து புதியதொரு உலகை நோக்கிப் போகின்ற, புதிய அரசியல் கலாசாரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற ஒரு காலமாக இந்தக் காலத்தை நாம் மாற்றவேண்டி இருக்கின்றது.
இப்படியான துன்ப துயரங்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு இன மக்களுக்கும் தேர்தல் ஒன்று தேவைப்படவேயில்லை. யாரும் கோரவும் இல்லை. ஆனால், அரசுக்கு தேர்தல் தேவைப்படுகின்றது. இத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் தனது பொம்மை அரசைக் கொண்டு மாகாண அபிவிருத்தி என்ற பெயரில் பெருந்தொகை உதவிகளை கடனாகவும், நன்கொடையாகவும் வெளிநாடுகளிலிருந்து பெற்று அப்பணத்தை யுத்தத்திற்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசின் இவ்வாறான கபடத்தனத்திற்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது.