*இரு சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தல்
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை உறுப்புரிமைக்காக கடும் பிரயத்தனம் செய்து வரும் இலங்கை, பாகிஸ்தான், பஹ்ரெய்ன், காபொன், சம்பியா ஆகிய நாடுகள் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க தவறிவிட்டதாகவும் இந்நாடுகளை உறுப்புரிமை பெறுவதற்கு தகுதியற்றவையென நிராகரித்து விடுமாறும் உரிமைகளுக்கான இரு கண்காணிப்பு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் காபொன், சம்பியா நாடுகளுக்கு ஆசனங்கள் கிடைப்பது உத்தரவாதப்பட்டிருப்பதாகவும் ஏனெனில் அந்நாடுகளுக்கான உறுப்புரிமையை பிராந்திய குழுக்களும் ஆபிரிக்காவும் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகவும் அதனால் எதிர் வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் இந்த இரு நாடுகளின் உறுப்புரிமையும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுதந்திர இல்லம்(freedam house)மற்றும் ஐ.நா.கண்காணிப்பகம்(un watch)என்ற இரு மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
பேரவையின் ஆசனங்களைப் பெறுவதற்கான போட்டியில் ஆபிரிக்காவிலும் வேறு இடங்களிலுமுள்ள ஐனநாயக நாடுகள் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஐ.நா.கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றிலல் நியூயர் விமர்சித்திருக்கிறார்.
தமது சொந்தப் பிரஜைகளின் மனித உரிமைகளை கிரமமாக மீறி வரும் அடக்கு முறை அரசாங்கங்களுக்கு சர்வதேசரீதியான நன் மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நாடுகளாக இந்த நாடுகள் உருவாகி விடுமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சுதந்திர இல்லமானது நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கிவருவதுடன், உலகளாவிய ரீதியில் சுதந்திரமான கருத்துகளை மேம்படுத்தப்பாடுபட்டு வருகிறது. அதே போன்று ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா.கண்காணிப்பகம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா.செயற்படுவதை கண்காணித்து வருகின்றது. உள்நாட்டிலும் ஐ.நா.விலும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பதிவுகளைக் கொண்ட நாடுகளே மனித உரிமைப் பேரவையிலுள்ள 20 உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெறுவதை ஐ.நா. கண்காணிப்பகம மதிப்பீடு செய்து வருகிறது.
ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் பேரவையானது பிராந்தியக் குழுக்களை உள்ளடக்கியுள்ளது. இக்குழுக்கள் ஆபிரிக்கா, ஆசியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவையாகும். ஒவ்வொரு குழுவிலும் 13 நாடுகள் உள்ளன. இவை ஒன்றிணைந்து வாக்களித்தால் 26 வாக்குகள் கிடைக்கும். இதனால் பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றுக்கு 7 நாடுகளின் பிரதிநிதித்துவம் உள்ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தற்போது கியூபா, சவுதிஅரேபியா, சீனா, ரஷ்யா ஆகியவையும் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றின் மனித உரிமைப்பதிவுகள் கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, காபொன், சம்பியா ஆகியவற்றின் மனித உரிமை பதிவுகள் கவலையளிப்பதாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.வின் பொதுச் சபையானது 47உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை பேரவைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்யும். மே 21இல் இத் தேர்வு இடம்பெறும். ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான உறுப்புரிமைக்கு போட்டியில்லை. ஆசியாவுக்கான ஆசனங்களை பெற்றுக் கொள்ள 6 நாடுகள் போட்டியிடுகின்றன. பஹ்ரெய்ன், கிழக்கு தீமோர், பாகிஸ்தான், ஜப்பான், இலங்கை, தென்கொரியா ஆகியவை போட்டியிடும் ஆசிய நாடுகளாகும்.