அண்மையில் கனடா இரகசியப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது கனடாவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான பல்வேறு பத்திரங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் இவற்றின் மூலம் கனடிய உலகத்தமிழர் அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைத்திருந்த நெருங்கிய தொடர்புகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கனடிய இரகசிய பொலிஸ் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு கனடியப் பொலிஸார் கைப்பற்றியுள்ள பத்திரங்களிடையே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்டு அனுப்பிய இரகசியக் கடிதங்களும் இருந்ததாக கனடிய இரகசிய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகள் இயக்கத்துக்காக பெருந்தொகையில் நிதிசேகரிப்பு, யுத்த ஆயுதங்கள், உபகரணங்கள் கொள்வனவும் கடத்தலும் போன்ற பயங்கரவாத ஆதரவுச் செயற்பாடுகளில் நெடுங்காலமாக கனடாவில் மொன்றியல் நகரில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு ஈடுபட்டிருந்ததைத் தெளிவாக நிரூபிக்கும் சாட்சிகளாக அங்கு கைப்பற்றப்பட்ட இரகசியப் பத்திரங்கள் அமைந்திருப்பதாக மேலும் கனடிய இராணுவ பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.
இவ்வாறு கனடாவிலுள்ள உலகத்தமிழர் அமைப்புக்கு புலிகள் அமைப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் உள்ள நெருங்கிய தொடர்புகளை அத்தாட்சிப்படுத்தும் இரகசிய பத்திரங்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கனடிய நீதிமன்றத்தில் கனடிய உலகத்தமிழர் அமைப்புக்கு எதிராகப் பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டின் பேரில் கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் அத்தாட்சிகளாக மேற்படி இரகசியப் பத்திரங்களை நீதிமன்றத்தில் கனடிய பொலிஸ் தரப்பு சமர்ப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் கனடிய இரகசிய பொலிஸ் தரப்பில் தோன்றிய கனடா இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஷேர்லி டேவர்மன் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கையில்;
மேற்படி, இரகசிய பத்திரங்களிடையே கனடா உலகத்தமிழர் அமைப்பு சேகரித்த நிதி பற்றிய விபரங்களும் அந்த நிதிகள், வைப்புச் செய்யப்பட்ட விபரங்களும் மேலும் அந்தப் பெருந்தொகை பணத்தையும் எவ்வாறு யார் பேரில் அல்லது எந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய வேண்டும், யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது பற்றி புலிகள் இயக்கத் தலைவர் வழங்கிய கடிதங்களும் இருப்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு பிரபாகரன் கையொப்பமிட்ட பத்திரங்களும் அவற்றிடையே இருப்பதாகவும் இந்தப் பத்திரங்கள் கனடிய உலகத்தமிழர் அமைப்புக்கும் பயங்கரவாத விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை நிரூபிப்பதாக உள்ளதாகவும் மேலும் ஷேர்லி டேவர்மன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேற்படி, கனடிய நீதிமன்றத்தில் கனடிய இரகசிய பொலிஸ் கனடா உலகத் தமிழர் அமைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்த பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான மிக முக்கிய பத்திரங்களாக குறித்த இரகசியப் பத்திரங்கள் கருதப்படுகின்றன. மேலும், இவற்றில் 2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 பெப்ரவரி மாதம் வரையில் உலகத் தமிழர் அமைப்பினால் பயங்கரவாதப் புலிகள் அமைப்புக்காகச் சேகரிக்கப்பட்ட மொத்த நிதிகள் பற்றிய விபரங்களும் அடங்கியிருப்பதாகவும் இந்த வகையில் கடந்த பெப்ரவரி வரையில் மூன்று இலட்சத்து இரண்டாயிரம் டொலர்கள் வரையில் உலகத்தமிழர் அமைப்பு கனடாவில் நிதி சேகரித்துள்ள பற்றிய விபரங்களும் அந்த பத்திரங்களிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலும் கனடிய இரகசிய பொலிஸ் பிரிவு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திவயின: 06.05.2008