கொல்கத்தா அணியின் சொயிப் அக்தர் இன்று வியாழக்கிழமை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸிடன் நடைபெறும் போட்டியில் விளையாடமாட்டார்.
தடை தற்காலிகமாக நீக்கப்பட்டதால் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப்அக்தர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கொல்கத்தா அணி இன்று பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் அக்தர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் புச்சனன் கூறியுள்ளார்.
இதே நேரம் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆர்வத்தோடு இருப்பதாக சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொயிப்அக்தர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதற்காக அக்தருக்கு ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டது. இதனை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
இதனிடையே தன்னுடைய தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று அக்தர் கேட்டுக் கொண்டார். இதனை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து அக்தர் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வாய்ப்புண்டானது. கொல்கத்தா அணி சார்பில் விளையாடுவதற்காக லாகூரிலிருந்து டெல்லி வந்தடைந்த அக்தர் பின்னர் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட ஆர்வத்தோடு இருப்பதாகவும் தனக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்கள் மற்றும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.