சொந்த மண்ணில் சென்னை அணிக்கு சோகம். துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சொதப்ப, டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல், தொடரில் வரிசையாக மூன்றாவது தோல்வியை பதிவு செய்தது. ஹைடன், ஹசி இல்லாத நிலையில் சென்னை அணியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது
ஐ.பி.எல். `ருவென்ரி-20' தொடர் விறுவிறுப்பாக நடக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்த சென்னை அணி, வெற்றியைத் தேடி களமிறங்கியது. ஏற்கனவே 5 தோல்விகளை சந்தித்த டெக்கான் அணியும் வெற்றியை எதிர்பார்த்து களம் புகுந்தது.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக லட்சுமண் பங்கேற்க இயலவில்லை. இவருக்குப் பதிலாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கப்டன் பொறுப்பை கில்கிறிஸ்ட் ஏற்றார். சென்னை அணியில் வித்யூத் சிவராமகிருஷ்ணன் நீக்கப்பட்டார். முன்னாள் வீரர் ஷ்ரீகாந்த் மகன் அனிருத் முதல் முறையாக வாய்ப்புப் பெற்றார். நாணய சுழற்சியில் வென்ற கில்கிறிஸ்ட் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
விஜய்குமார் வீசிய முதல் ஓவரிலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்த்திவ் படேல் தூக்கி அடிக்க... படுவேகமாக ஓடிய ஆர்.பி.சிங். எல்லைக் கோட்டு அருகே அருமையாக பந்தைப் பிடிக்க.. 4 ஓட்டங்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த அனிருத் (1) கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். இவர் ஆர்.பி.சிங். வேகத்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்டைரிஸ் வீசிய 6 ஆவது ஓவரில் அதிசயம் அரங்கேறியது. பிளமிங் (14) பந்தை அடிக்க... அப்படியே அந்தரத்தில் பறந்து `கட்ச்' பிடித்தார் ரோகித் சர்மா. இதற்கு அடுத்த ஓவரில் இன்னொரு ஆச்சரியம். அப்ரிடியின் சுழலில் நன்கு விலகிச் சென்ற பந்தை பத்ரிநாத் (0) தேவையில்லாமல் அடிக்க...காத்திருந்த கிப்ஸ் நல்ல உயரத்தில் பறந்து `டைவ்' அடித்து அற்புதமாக `கட்ச்' பிடித்தார்.
இப்படி டெக்கான் வீரர்கள் பாய்ந்து... பறந்து களத்தடுப்பு செய்ய, சென்னை அணியின் முன்வரிசை சரிந்து போனது. 6.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்கள் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
இதற்குப் பின் சுரேஷ் ரெய்னா, கப்டன் தோனி ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். இருவரும் அப்ரிடியின் சுழலில் பவுண்டரிகள் அடித்து அசத்தினர். இந்த நேரத்தில் பங்கர் வீசிய பந்தை வீணாக அடித்த ரெய்னா 32 ஓட்டங்களுக்கு (5 பவுண்டரி) வெளியேறினார். இவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய தோனியும் 31 பந்தில் 23 ஓட்டம் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார்.
கடைசிக் கட்டத்தில் மோர்கல் அதிரடியாக விளையாடினார். ஓஜா வீசிய 17 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். மைதானத்துக்கு வெளியே பறந்த இந்தப் பந்து சுமார் 124 மீற்றர் தூரத்துக்கு சென்றது. ஸ்டைரிஸ் வீசிய அடுத்த ஓவரில் மோர்கல், ஜோகிந்தர் சர்மா தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ஜோகிந்தர் 16 ஓட்டங்களுக்கு ஆர்.பி.சிங் பந்தில் போல்டானார்.
பங்கர் வீசிய கடைசி ஓவரில் கோனி இரண்டு இமாலய சிக்ஸர், மோர்கல் ஒரு பவுண்டரி அடிக்க... 20 ஓட்டங்கள் கிடைத்தது. 20 ஓவரில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. மோர்கல் (29), கோனி (15) ஆட்டமிழக்காமலிருந்தனர்.
இலகுவான இலக்கை விரட்டிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கப்டன் கில்கிறிஸ்ட் - கிப்ஸ் இணைந்து அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். நிற்னி வீசிய 3 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் கிப்ஸ். இவர் 10 ஓட்டங்களுக்கு கோனி பந்தில் வெளியேறினார். இதற்குப் பின் கில்கிறிஸ்ட் - ஸ்டைரிஸ் சேர்ந்து வெளுத்து வாங்கினர். நிற்னி வீசிய 6 ஆவது ஓவரில் கில்கிறிஸ்ட் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். அரைச்சதம் அடித்த கில்கிறிஸ்ட் 54 ஓட்டங்களுக்கு (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த ரோகித் சர்மாவும் கலக்கினார். நல்ல போர்மில் உள்ள இவர், ஜோகிந்தர் வீசிய 14 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார், ரோகித் 23 ஓட்டங்களுக்கு முரளிதரன் சுழலில் சிக்கினார். பின்னர் வந்த அப்ரிடி வாண வேடிக்கை காட்டினார்.
ஜோகிந்தர் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து மிக விரைவாக வெற்றியை உறுதி செய்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ஸ்டைரிஸ் (36), அப்ரிடி (20) ஆட்டமிழக்காமலிருந்தனர். ஆட்டநாயகன் விருதை கில்கிறிஸ்ட் தட்டிச் சென்றார்.