-மா.பா.சி-
மலையகக் கலை, இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் மூத்த பத்திரிகையாளர் கே.ஜி. மகாதேவா (மகான்) வின் `கதையல்ல நிஜம்' நூல் வெளியீட்டு விழா அண்மையில் புறக்கோட்டை, பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தினக்குரல் பத்திரிகை ஆலோசகர் ஈ.வீ. டேவிட் ராஜூ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செல்வி ச.தர்சினி தமிழ் வாழ்த்துப் பாடினார். எழுத்தாளர் லுணுகலை ஷ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரை - ஈ.வீ.டேவிட் ராஜூ
பழைமையைப் பறை சாற்றும் இம்மண்டபத்தில் சக பத்திரிகையாளர் மகானின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கு பற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இரு முக்கிய ஆற்றல்கள் பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டும். ஒன்று செய்திகளைச் சேகரிப்பது மற்றது அதை மக்களுக்கு எளிய நடையில் இனிய முறையில் வழங்குவது.இவை இரண்டும் மகானிடம் அற்புதமாகக் காணப்பட்டன. அவர் பத்திரிகைத் துறையில் நிலையான வளர்ச்சியைக் கண்டவர். பத்திரிகைகளுக்குத் தேவையான மாற்றீடு அம்சங்களுமுண்டு. பிரசுரிக்கும் தகவல்களில் நம்பகத் தன்மை இருக்க வேண்டும். அத்தோடு மக்களுக்கு வகை சொல்லும் முறையில் நிதானமாகத் தயாரிக்க வேண்டும். மகாதேவா புலம் பெயர்ந்து விட்டார். இப்புலப் பெயர்ச்சியால் 90% சதவீதமான தமிழ் பேசும் மக்களின் குடும்பங்கள் நலமாக இருக்கின்றன. பணம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், வெளிநாட்டில்,இங்குள்ளோரது ஆதங்கங்களை உணர்கின்றனரா?
புலம்பெயர்ந்தோரது பிரதேசங்கள் விருத்தி பெற்றனவா? மனித வளத்தைக் குறித்து நாம் சிந்திக்கவில்லை. அதன் மேன்மையை, மகிமையை நாம் உணரவில்லை. முதியவரொருவர் நிலத்தில் விழுந்தால் தூக்க பக்கத்து வீட்டுக்காரர் தான் வர வேண்டும்.
உண்மையான ஜனநாயகமெனின் பெரும்பான்மையினர் சிறு பான்மையினருக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எளியோருக்காக வலியோரும் வலியோருக்காக எளியோரும் பேச வேண்டும். எனது இறுதிக் காலத்தில் என் பக்கத்தில் என் பிள்ளைகள் இருக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
நூல் அறிமுகம்-கலாபூஷணம் கலைச் செல்வன்
பத்திரிகையாளர்களோடு மிக நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். கலைத்துறையில் எனக்கிது பொன்விழா ஆண்டு. என்நெஞ்சில் பதிந்தவர் மகாதேவா. ஈழ நாடு செய்திப் பத்திரிகைகளில் என்னைப் பற்றி எழுதியவர். இந் நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்குவதென்ற கேள்வி எழுந்த பொழுது அழைப்பிதழில் டேவிட் ராஜூவின் பெயரைப் போடுங்களென நானே நம்பிக்கையோடு சொன்னேன். கால் நூற்றாண்டு காலமாக ஈழ நாட்டில் மகாதேவா கடமையாற்றினார். இன்று காண முடியாத மனிதத்தையும் மனித நேயத்தையும் அன்றைய பத்திரிகையாளர்களிடம் கண்டோம். இன்று அலைகள் காணப்படுவதில்லை. அன்றைய பத்திரிகையாளர்கள் ஐக்கியத்துக்காகப் பேனை பிடித்தனர். இப்படியும் நடக்கிறது' என்ற தனது பத்தியில் மகாதேவா மக்களுக்கான தகவல்களையும் கருத்துகளையும் சுட்டிக் காட்டினார்.அவை மிக முக்கியமானவையாக இருந்தன. இப்படியும் நடக்குமா? என்ற கேள்வியை வாசகனின் மனதில் ஊன்றின. யாழ்ப்பாணத்து மண்ணில் இருந்து கொண்டே அந்த மண்ணை விமர்சித்தார் `கதையல்ல நிஜம்' என்ற அவரது நூல் எக்காலத்துக்கும் உதவக் கூடியது.
நூல் வெளியீட்டு வைபவத்தில், `கதையல்ல நிஜம்' நூலின் முதல் பிரதியை விழாத் தலைவர், புரவலர் ஹாஸிம் உமருக்கு வழங்கினார். பிரமுகர்களுக்கு சிறப்புப் பிரதிகளும் வழங்கப்பட்டன. இந்நூலின் விற்பனை மூலம், இவ்விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி `கொழுந்து' சஞ்சிகையின் வளர்ச்சி நிதிக்கு அளிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரை - கலாசூரி.ஆ.சிவனேசச்செல்வன்
ஈழ நாடு பத்திரிகைக்கு மூத்த பத்திரிகையாளர்களான ஹரன், கோபாலரத்தினம்(கோபு) ஆகிய பத்திரிகை உலக ஜாம்பவான்கள் ஆற்றிய பணி மகத்தானது. உண்மைகளைப் பேசிய காலம் பழம் கதையாகிவிட்டது. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில் வாழ்கிறோம். இந்நிலையிலிருந்து எப்போ மீள்வோமென நாம் சிந்திக்க வேண்டும். பத்திரிகையாளருக்குத் துணிவு இருக்க வேண்டும். மகான் தான் எழுதியவைகள் சிந்தாமல் போகாதிருக்கும் பொருட்டு நூலாக்கியிருக்கிறார். மாதொரு பாகன் என்ற பெயரிலும் எழுதினேன். எழுதியவைகளைப் புத்தகமாக்க இருக்கிறேன். மகான் துணிந்து எழுதினார். பல புதிய பத்திரிகையாளர்களை உருவாக்கினார். அவரோடு சசிபாரதியும் இருந்தார். ஊடகங்கள் பத்திரிகைகளில் பணி புரிவோர் பல பயமுறுத்தல்கள் மத்தியில் கடமையாற்றுகின்றனர். 90 களில் பத்திரிகைத் துறை எப்படி இருந்தது? நாங்கள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்ட முடியுமா? உண்டாக்க முடியுமா? பழையவைகளைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உண்டு. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சரியான வழிகளைக் காட்ட வேண்டும். வ.ரா.நடைச் சித்திரங்களை எழுதினார். யாழ்ப்பாணத்து விடயங்களை ஹன், கோபு, மகான் ஆகியோர் பத்திரிகையில் காட்டினர். நாம் போக வேண்டும் நெடுந்தூரம். போகுமிடந் தூரம், செல்லும் வழி இருட்டு! மகான் அனாயசமாகச் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டார். தெளிவாக எதையும் சொல்பவர்கள் ஊடகத்துறையினர். பலவிதமான செய்திகள் மத்தியில் நாம் தேங்கிப் போய் இருக்கிறோம்.
நடைபெற்ற உண்மையான செய்திகளை வெளியிட்ட பத்திரிகை வீரகேசரி. ஊடகத்துறை விஸ்வரூபத்தில் வளர்ந்து விட்டது. இப்போ ஊடகத்துறைக்கு யார் பயப்படுகிறார்கள்? ஊடகத்துறையினருக்கு ஆங்கிலமும் வாசிப்பும் முக்கியமானவை. ஊடகத்துறையினர் பயத்துடனேயே வாழ்கின்றனர். அந்தந்த மக்களது பிரச்சினைகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிக்கொணர வேண்டும்.அந்தனி ஜீவா கலை, இலக்கியப் பணிகளினூடாக மக்களுக்கு ஆற்றும் பணி பெறுமதியானது. மலையக இலக்கியத்துக்குப் புதியதோர் பரிமாணத்தைக் கொண்டு வந்து நல்லதோர் சமுதாயத்தை அங்கு ஆக்குவதற்குக் `கொழுந்து' சஞ்சிகை தன் பணியை அதிகரித்துள்ளது.
மலையகத் தமிழாராய்ச்சிச் செயலகச் செயலாளர் சு.முரளிதரன்
பாராட்டுரை - கௌரவ அமைச்சர் மலையகத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்தி சகல தேசங்களுக்கு மலையக ஆற்றல்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டினார். எமது எழுத்தாளர்களுக்கு இதன்மூலமாக ஒரு தெளிவு ஏற்பட்டது. நிமிர்ந்து தைரியமாக எழுத்தாளராக வெளிவந்தனர். கவிஞர் வெள்ளைச் சாமி கவி வாழ்த்து வாசித்தார். நீதி, சட்ட மறுசீரமைப்புப் பிரதி அமைச்சர் மாண்புமிகு வீ.புத்திரசிகாமணி அவர்களுக்கு மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையைக் கௌரவிக்கு முகமாக' மலையகத் தமிழக காவலன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அத்தோடு கிரீடம், வாள் என்பன வழங்கப்பட்டன. பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு, முத்திரைப் போத்தலும் வழங்கப்பட்டது.
`கொழுந்து' ஆசிரியர் கலாபூஷணம் அந்தனி ஜீவா நன்றியுரை செய்தார். கௌரவ அமைச்சர் வீ.புத்திரசிகாமணி புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோர் மலையகத்துக்கு ஆற்றிவரும் சேவை குறித்து விலாவாரியாக விபரித்தார். நூலாசிரியர் கே.ஜி.மகாதேவா குறித்து கருத்துரைக்கையில்;
பத்திரிகையாளர்கள் மகாதேவாவோடு எனக்கு 30 வருடப் பழக்கமுண்டு. பண்டிதர் வி.சி. கந்தையாவின் பெறாமகன், திருச்சியில் வாழ்கிறார். நூல்களைக் காந்தளத்திலிருந்தே பெற்றோம் என்றார்.
ஏற்புரை பிரதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி
மலையக கலை, இலக்கியப் பேரவை எனக்குப் பட்டமளித்ததற்கு நன்றி. லயன்ஸ் கழகம் பழையை உறுப்பினர்களை மறப்பதில்லை. அவர்களை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுக்கின்றது. அரசியலில் அப்படி அல்ல. அரசியல்வாதிகளை அவர்கள் செய்த கெட்டவைகளுக்காகவும் நல்லவைகளுக்காகவும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர்.
கலைஞர்களை மட்டுமன்றி அரசியல்வாதிகளையும் வாழ்த்த வேண்டும்.
இது அரிசியைப் பற்றி மிகையாகச் சிந்திக்கும் காலம்.அரிசி அரசியலை மாற்றியதுண்டு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு மூத்த குடி என்பதை நான் நம்புவதில்லை. மக்கள் உண்மை நிலையை அறிய வைக்க வேண்டும். குவேனி ஒரு பேய். யக்சினி. பேயோடு எப்படி மனிதன் வாழ்ந்திருக்க முடியும்? அதில் யதார்த்தமில்லை. கொழும்புக்கு வந்துள்ள மலையகத்தவர்களுக்கு தாம் மலையகத்தவர் எனச் சொல்ல வெட்கம். சிங்களத்தையும் தமிழையும் ஷ்ரீ விக்கிரமராஜசிங்கன் பேசினார். மலையக மக்கள் எப்போ இலங்கை வந்தார்கள்? ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலையுண்டு. எம் மக்கள் தமது ஆரம்பப் பாடசாலையைச் சொல்ல வெட்கப்படுகிறார்கள். நீர்கொழும்புத் தமிழர் படிப்படியாகச் சிங்களவராகிக் கொண்டிருக்கின்றனர். கேரளாவில் இங்குள்ள கட்டிச் சம்பல் கிடைக்கும். கறுப்பின மக்கள் ஆபிரிக்க நாட்டிற்கு வந்து போகின்றனர். மைக்கல் ஜாக்ஷன், ஒபோமா ஆகியோர் தமது சொந்த மண்ணுக்குப் போய் வருகின்றனர். மாட்டின் லூதர் கிங் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் பலர். மலையகத்தில் எழுச்சி இல்லை. அக்காலத்தில் மலையகப் பெண் ஒருவர் கூடப் பாடசாலைக்குப் போவதில்லை. இன்று அந்த நிலை இல்லை. இதுதான் நமது நாடு. மலையகத்தை விடச் சென்றவர்கள் சென்ற இடங்களில் அடிவாங்குகின்றனர். கேரளத்தில் கர்னாடகத்தில் இது நடந்துள்ளது. ஏணிணடிஞு,ஏணிதண்ஞு என்ற ஆங்கிலச் சொற்களுக்கிடையில் வித்தியாசமுண்டு. அதுபோல் வர்த்தகம், வியாபாரம் என்பவற்றுக்குமிடையிலும் வேறுபாடுண்டு.
கொழும்பு மலையக மக்களுக்குச் செய்யும் சேவைகளைப் பாராட்டுகிறேன். அந்தனி ஜீவா பின்புலத்திலிருந்து எனக்கு ஆதரவு தருபவர். மலையகப் பிள்ளைகளுக்கென நியமனம் பெற்றவர்கள் மலையகத்திலேயே படிப்பிக்க வேண்டும். நாமொரு தனித் தேசிய இனம். நாம் தமிழரெனக் கோஷிக்கும் உயர்வாக இருப்போர் எம்மைத் தேடி வர வேண்டும். அழைக்க வேண்டும். திருமணம் செய்ய வேண்டும். இங்குள்ளோர் மலையகத்தை முன்னேற்ற முயற்சி எடுக்க வேண்டும்.