* ஹசன் அலி தெரிவிப்பு
பேரினவாதத்துக்கு தலையாட்டும் பொம்மையொன்றை முதலமைச்சராக்கிவிட்டு கிழக்கு மாகாணத்தை தமது கோரப்பிடிக்குள் வைத்திருக்க சூழ்ச்சி செய்யும் அரசினதும் அதன் அடிவருடிகளினதும் திட்டத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் தகர்த்தெறிவார்களென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற எஸ்.எஸ்.பி. மஜீட் தலைமையில் பொத்துவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட வெற்றியாகும். இந்த நாட்டில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்ற ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் விரும்புகின்ற ஒரு கட்சியாகும். தமிழ் பேசுகின்ற மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களை பேரினவாத அடக்கு முறையிலிருந்து மீட்டெடுக்கப் போராடுகின்ற உயரிய நோக்கம் கொண்ட கட்சியாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.
பெருந்தேசிய கடும் போக்கு வாதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தமிழ் பேசும் மக்களின் எல்லைப்புறக் காணிகளின் கபளீகரம் காரணமாகக் குரல் எழுப்பினோம். அந்தக்குரல் அவர்கள் காதுகளில் விழவில்லை. இதனால், ஏப்ரல் இரண்டாம் திகதி அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம். நான்கு மாதங்களின் பின்னர் பாராளுமன்றப் பதவிகளையும் தூக்கிவீசிவிட்டுத் தமிழ்பேசுகின்ற மக்களுக்காகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம்.
இந்தத் தேர்தல் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தேர்தலாகும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற தமிழ் முஸ்லிம் உறவைச் சிதைப்பதற்குப் பேரினவாதம் போடுகின்ற சதித்திட்டந்தான் இந்தத் தேர்தல். தமிழ், முஸ்லிம் உறவில் சிறுகலகம் ஏற்படுவதற்குக் கூட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.
தமிழ் முஸ்லிம் உறவைச் சீரழிக்க நினைக்கின்ற கடும் போக்கு வாதிகளின் சூழ்ச்சி வலைகளுக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது. தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று பேரினவாதம் கடும் போக்குடைய இந்த அரசாங்கத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தான் எமது சமூகங்களுக்கான விடுதலையும், ஜனநாயக வழிமுறையும் பாதுகாக்கப்படும்.
1987 ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து 20 வருடங்களின் பின்பு அதாவது 1987 ஆம் ஆண்டின் நிலைக்கு அரசாங்கம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக ஒரு தமிழர் வரவேண்டுமா? அல்லது ஒரு முஸ்லிம் வரவேண்டுமா? என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் திட்டமிட்டுத் தோற்றுவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராடுவது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு முஸ்லிம் மாகாணத்துக்காகத்தான்.
வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிக்கும் போது எமக்கான முஸ்லிம் மாகாணத்தைத் தந்துவிட்டுத் தான் பிரித்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படிச் செய்யாமல் தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறது. அரசாங்கத்தின் இந்தச் சதித் திட்டத்திற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் துணை நிற்பது தான் கவலைக்குரிய விடயம்.
மறைந்த எமது தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் கிழக்கு மாகாணம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் கனவு கண்டதில்லை. அவர் கண்ட கனவு முஸ்லிம் மாகாணமாக இருந்தது. பேரினவாதம் கடும் போக்குவாதிகளின் பிடியில் கிழக்கு மாகாணத்தை அடமானம் வைப்பதற்காக அமைச்சர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் வாழ்கின்ற சகல சமூகங்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களையும் தமிழர்களையும் மோதவிடுகின்ற இந்தத் தேர்தலை நாம் எதிர்க்கின்றோம். இப்படியான ஒரு தேர்தல் வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும், தேர்தல் வந்துவிட்டது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பும் எம் வசம் உள்ளது. எப்படியாவது இந்தத் தேர்தலை வெல்ல வேண்டும். என்ன விலை கொடுத்தாவது கிழக்கைக் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு தான் பேரினவாதம் இந்தத் தேர்தலை நடத்துகிறது. பேரினவாதத்துக்குத் தலையாட்டுகின்ற ஒரு பொம்மையை முதலமைச்சராக்கிவிட்டு பேரினவாதிகளின் பிடியில் கிழக்கு மாகாணத்தை வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.
தமிழ் பேசுகின்ற நாம் மொழியால், பிரதேசத்தால், மன ஒருமைப்பாட்டால், இணைந்தவர்கள், இந்த இணைவு தொடர்ந்து நிலைக்க வேண்டும். அதைப் பாதுகாக்கின்ற பாரிய பொறுப்பும், கடமைப்பாடும் மக்களாகிய உங்களிடமே உள்ளது. தமிழ்பேசுகின்ற மக்களாகிய நீங்கள் பாரிய வரலாற்றுத் தவறை செய்துவிடாமல் வாக்குகள் என்ற பெறுமதி வாய்ந்த அதிசக்தியைப் பயன்படுத்திப் பேரினவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குத் துணை நிற்பவர்களுக்கும் நல்ல பாடம் புகட்டவேண்டும்.
இந்தத் தேர்தல் சர்வஜன வாக்கெடுப்புக்கு நிகரானது என்று பசில் ராஜபக்ஷ சொல்லி வருகிறார். அவரது இந்தக் கூற்றைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்புக்குச் சமனானது என்று கருதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
கிழக்கு மாகாணம் ஆயுதக் கலாசாரத்தோடு இருக்கப்போகிறதா? அல்லது ஜனநாயகவழியில் நின்று தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போகின்றதா? என்பதைத் தீர்மானிக்கப் போகின்ற வரலாற்று நிகழ்வு இந்தத் தேர்தல் மூலம் அரங்கேறப்போகிறது. அந்த வரலாற்று நிகழ்வு தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சாதகமாக அமைய வேண்டும். அப்படி அமைகின்ற சந்தர்ப்பத்தில் தான் எமது கிழக்கு மண் கடும் போக்காளர்கள் பிடியிலிருந்தும், பேரினவாதிகளின் பிடியிலிருந்தும் மீட்கப்படும்.
இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொய்யான கேலிக்கூத்தான செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல வேண்டுமென்று அரசாங்கம் நினைக்கிறது. கிழக்கில் ஜனநாயகம் உண்டு. ஆயுதக் குழுக்கள் கிடையாது. சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம். தமிழ்பேசும் மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். கிழக்கை அபிவிருத்தி செய்துவிட்டோம் என்றெல்லாம் பொய்யான பிரசாரத்தை சொல்ல வைக்கப்போகின்றீர்களா என்பதை நீங்கள் தீர்மானிக்கின்ற தேர்தல் தான் இது.
இன்று மின்னும் கிழக்கு கறுக்க வேண்டாம். நீண்ட இரவு கிழக்குக்குத் தேவையில்லை. உங்கள் வாக்குகள் தான் சூரியன்கள். பேரினவாதம் என்ற இருளை அப்புறப்படுத்திக் கிழக்கில் நிலையான பிரசாரத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் உங்கள் காலடிக்குத் தேர்தல் என்ற பெயரில் வந்துள்ளது. பேரினவாத இருளைத் தொடரவிடாதீர்கள். கடும்போக்குவாத இரவைப் பரவச் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் பிரகாசம் பொருந்திய வெளிச்சங்கள். இந்த வெளிச்சங்களைச் சரியான முறையில் சரியான வகையில் பயன்படுத்திப் பேரினவாத இருளை விரட்டுங்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேரொளி என்பதை எதிரிகளும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பேரொளிக்கு முன், மக்கள் சக்திக்கு முன் எதுவும் தோற்றுவிடும் என்பது தான் பேருண்மை.