கிழக்குத் தமிழர்களின் இதயமாக விளங்கும் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் அரசின் வெற்றிலைச் சின்னத்தை வெற்றியடைய வைத்து தமிழர்களின் சுயகௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீண்டும் அவ்வாறானதொரு அவமானத்தை ஏற்படுத்த முனைகின்றனர். எனவே, நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு நல்லதொரு தீர்ப்பை தருவார்களென்ற நம்பிக்கை தமக்குண்டென ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திருமலை மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எல்லா இடங்களிலும் அவர்களது படகுச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், மட்டக்களப்பு மாநகர சபைக்கு மாத்திரம் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டார்கள். மட்டக்களப்பு மாநகர சபை கிழக்கின் முழு தமிழர்களுக்கும் இருக்கின்ற ஒரே ஒரு மாநகர சபையாகும். அதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதைப் பற்றி மட்டக்களப்பு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அக்கூட்டத்தில் நான் பேசினேன்.
இதன் மூலம் அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்கான ஒரு ஒத்திகையையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செய்து பார்த்தார்கள். அதுமட்டுமன்றி, இதனூடாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இதயமாக விளங்கும் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் வெற்றிலைச் சின்னத்தை வெற்றியடைய வைத்து தமிழர்களது சுயகௌரவத்துக்கும் மாபெரும் பங்கத்தை அவர்கள் ஏற்படுத்தி இருந்தார்கள்.
மட்டக்களப்பில் மேடையில் ரணில் விக்கிரமசிங்கவை வைத்துக்கொண்டு நான் பேசும் போது, அங்கிருந்த தமிழ் மக்களுக்கு ஒன்றை நான் தெளிவாகச் சொன்னேன். மட்டக்களப்பில், முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முதல் முறையாக இது தான் மாற்றுச்சின்னத்தில் போட்டியிடும் முதல் தருணம் என்று தெரிவித்திருந்தேன். அம்பாறையில் மாற்றுச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறோம். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது மரச்சின்னத்தை ஆரம்பம் தொட்டு இந்தத் தேர்தல் வரை கைவிடவே இல்லை. ஆனால், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தைரியத்துடன் தனித்து தேர்தலில் போட்டியிட்டிருப்பார்களேயானால் முஸ்லிம் காங்கிரஸும் தயங்காமல் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருந்திருக்கும்.
ஆனால், எங்களை அழிப்பதற்காக, எமது கட்சியிலுள்ள உறுப்பினர்களை ஒவ்வொருவராக பணமும் பதவியும் கொடுத்து எங்களிடமிருந்து பறித்தெடுத்த பிறகு, இந்த அரசாங்கம் ஆயுதங்களுடன் நடமாடுகின்ற பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு தேர்தலை திணித்தது. இதன் மூலம் இந்த பூமியில் சதாகாலமும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மகிந்த ராஜபக்ஷ அரசின் அராஜகப் போக்குக்கு அடிமைப்பட்டவர்களாக்குகின்ற இந்த முயற்சிக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு இருக்கின்ற சிறந்த மாற்று வியூகத்தை நாம் வகுத்துத்தான் ஆக வேண்டும்.
அந்த வகையில் இன்று நாம் வகுத்திருக்கின்ற இந்த வியூகம், எந்த வகையிலும் சோரம்போனதாக அமைய மாட்டாது. ஏதோ ஒரு வகையில் ஒரு தேசியக் கட்சியை நாங்கள் அரவணைத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எமக்கு இன்றிருக்கிறது. அதற்காகவே இதனை நாம் செய்திருக்கிறோம்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு என்றுமே நிம்மதியாக அமைச்சுப் பொறுப்பில் இருந்து அதன் சொகுசை அனுபவிக்க முடியாத அளவுக்கு, இந்த சமூகத்துக்கு ஒவ்வொரு தடவையும் அநியாயம் நடக்கின்றபோது அதைப்பற்றித் தட்டிக்கேட்க வேண்டிய கடப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தட்டிக் கேட்பதைப் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் அரசாங்கங்கள் நடந்துகொள்ளும்போது பதவிகளை உதறித்தள்ளிவிட்டு இந்த சமூகத்துக்கான போராட்டத்துக்கு மீண்டும் மக்களைத் தயார்ப்படுத்துகின்ற நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படுகிறது.
இரண்டு முறை எங்களால் அமைச்சுப் பதவிகள் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. ஒருமுறை அவர்களாக எங்களை விலக்கினார்கள். மறுமுறை நாங்களாக பதவிகளில் இருந்து விலகிக் கொண்டோம். இந்த அரசியல் முஸ்லிம் காங்கிரஸின் முன்னுதாரண அரசியலாக இன்று மாறியிருக்கிறது.
எங்களுக்கு துரோகத்தனங்கள் நடக்கின்றபோது இதே போன்று கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசிய அரசியல் நிறைய துரோகத்தனங்களைச் சந்தித்திருக்கிறது. மட்டக்களப்பிலும் பொத்துவிலிலும் அது நடந்திருக்கிறது. மட்டக்களப்பின் பிரதிநிதித்துவம் அன்று ஐ.தே.க. வினால் பறித்தெடுக்கப்பட்டது. பொத்துவிலிலும் அவ்வாறே பறித்தெடுக்கப்பட்டது என்ற வரலாறும் உண்டு. அன்றிருந்த அணுகுமுறை படிப்படியாக மாறி, சிறுபான்மை அரசியலில் தனித்துவமான அரசியல் இயக்கங்கள் பலமாக வளருகின்றபோது அவற்றை சிதைவுறாமல் பாதுகாக்கின்ற ஒரு பக்குவமான அரசியலை தேசிய அரசியல் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்குப் பிறகு இன்று ஐ.தே.கட்சி கடைப்பிடிக்க வேண்டிய ஒரு புதிய அரசியல் பரிமாணம் உருவெடுத்திருக்கிறது. அந்தப் பின்னணியில் இன்று எங்கள் மத்தியில் ரணில் உரையாற்றிச் சென்றிருக்கிறார்.
இன்று கிழக்கில் நடைபெறும் எமது கூட்டங்களை பார்த்த உடனேயே அரசுக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்துவிட்ட நிலையில் அமைச்சர்கள் பித்துபிடித்தவர்கள் போல ஆடியும், பேசியும் திரிகிறார்கள். எதைப்பற்றி மக்களிடம் பேசுவது என்று தெரியாத நிலையில் மு.கா. தலைவரை முதலமைச்சர் பதவி குறித்து இதுவரை பேசவில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.தே.க.வும், முஸ்லிம் காங்கிரஸும் இப்படியான ஒரு வியூகம் வகுத்திருக்கின்ற நிலையில், நிச்சயமாக நடக்கவிருக்கும் விடயங்களைப் பற்றி நாம் ஏன் எமது பேச்சுகளில் பேச வேண்டும் என்று கேட்க விரும்புகிறோம்.
ஐ.தேசியக் கட்சித் தலைவர் தான் செய்கின்ற உடன்படிக்கை எதையும் மீறுகின்ற பாரம்பரியம் இல்லாதவர், என்றுமே எங்களுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையைக் கண்ணியப்படுத்தியவர் என்ற மரியாதை எம்மத்தியில் அவருக்கு இருந்து வந்திருக்கிறது.
எங்கள் தனித்துவத்தையும், அரசியல் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள ஒரு மாற்றுமுகாம் பலமாக இருக்க வேண்டும் என்ற விடயம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த யாவரும் அறிவர். எனவே, ஐ.தே.க.வை முழுமையாக பலவீனப்படுத்தி அழிப்பதற்கு நாங்கள் அனுமதிப்பதென்பது எமது மாற்றுவழியை இல்லாமற் செய்வதாகும். அப்படிச் செய்து சொந்த அரசியலை அழித்துக் கொண்டு சரணாகதி நிலைக்கு சோரம் போகும் முஸ்லிம் அமைச்சர்களைப் போல முஸ்லிம் காங்கிரஸை நாமே அழித்துவிட முடியாது.
எங்களையும் பலப்படுத்திக்கொண்டு, ஐ.தே.க.வின் சிங்கள வாக்கு வங்கியையும் சேர்த்துக்கொண்டு சகோதர தமிழ் மக்கள் மத்தியில் `கிழக்கு என்பது தமிழ்பேசும் மக்களது மண்' என்று மிக நேர்மையாகக் கூறுகிறோம்.
மு.கா. தலைமைத்துவம் தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பக்குவமான அரசியலையே செய்து வந்திருக்கிறது. எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளுக்கு குந்தகமாக எதையும் பேசாமல் நேர்மையாக, அரசியலை செய்து வந்திருக்கிறோம். இம்மண்ணில் இப்படியான ஒரு அரசியல் பாரம்பரியத்தை நேர்மையாக வளர்த்தெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது சுதந்திரமான அரசியற் கருத்துகளையும் அரசியற் பிரதிநிதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு உள்ள வாய்ப்புகளை இல்லாமல் செய்கின்ற அரசுக்கும், அது செய்கின்ற அக்கிரமத்துக்கும் துணை போகின்ற தரப்புகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸும் ஒரு துணைச் சக்தியாக இருக்க முடியாது. எனவே, இத்தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் விமோசனத்துக்காக எடுத்திருக்கும் இம்முடிவுக்கு நல்லதொரு தீர்ப்பைத் தருவார்கள். அதன் பின் எம்மத்தியில் ஆட்சி அதிகாரங்களை நேர்மையாகப் பகிர்ந்துகொண்டு, நிரந்தரமான சமாதானத்துக்கு வழிகோலுவோம்.