* மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாட்சியமளிப்பு
யோ.நிமல்ராஜ்
திருகோணமலையிலிருந்து மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த கொமாண்டோ அணியினர் மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி காலை 4 மணிக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கச் சென்றபோது ஊர்காவற் படை வீரரொருவரும் சென்றதாக மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
மூதூரிலுள்ள அக்ஷன் பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி படுகொலை செய்யப்பட்ட 17 அக்ஷன் பாம் ஊழியர்கள் தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகின்றது. இவ்விசாரணையின் 18 ஆவது அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று வியாழக்கிழமை சாட்சியமளித்த 12 ஆவது சாட்சியான மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமர்வின்போது சட்டத்தரணி ஜெயந்த கொட்டக்கொடவின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்த சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
2006 ஆகஸ்ட் நான்காம் திகதி விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்டிருந்த தாக்குதலிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இறந்ததாக எனக்குத் தெரியும்.
திருகோணமலையிலிருந்து மீட்புப் பணிகளுக்காக மூதூரிற்கு அனுப்பப்பட்டிருந்த கொமாண்டோ படையில் முப்பது தொடக்கம் நாற்பது வரையிலான எண்ணிக்கையுடைய படையினரிருந்தனர்.
இந்நிலையில் 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு மூதூர் நகரை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக 20 படையினர் பொலிஸ் நிலையத்தைவிட்டு வெளியேறினர்.
இதேவேளை, பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் மூதூரின் அப்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
அன்றிரவு பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளிடையே நடந்த கலந்துரையாடலில் திருகோணமலையிலிருந்து மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த கொமாண்டோ படையினரில் சிலர் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதென்றும் ஏனையோர் மூதூர் நகரினை மீட்கச் செல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் மேஜர் ஒருவர் உள்ளடங்கலாக இருபதுபேர் மூதூர் நகருக்கு ஆயுதங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
நீதிபதியுடன் நடந்த கலந்துரையாடலில் மூதூர் வாழ் மக்களையும் நகரையும் பாதுகாக்க வேண்டுமென்றே தீர்மானிக்கப்பட்டது.
எமது பொலிஸ் நிலையத்திலிருந்து கொமாண்டோப் படையினர் ஆயுதங்களுடன் வெளியேறியதை நான் கண்டேன்.
அத்துடன், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடையிலேயே இருந்தனர். அவர்களுடன் ஊர்காவற் படை வீரரான ஜவாங்கீரும் கூடவே சென்றிருந்தார்.
ஆனால், என்னால் அவரை அடையாளங்காண முடியவில்லையென்பதுடன், ஜகாங்கீரை கொமாண்டோ அணியினருடன் செல்லுமாறு நான் உத்தரவிடவும் இல்லை. சரச்சந்திர என்ற பொலிஸ் அதிகாரிதான் ஜகாங்கீரை கொமாண்டோ படையினருடன் செல்வதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.
அத்துடன், ஜகாங்கீரின் சகோதரர் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றினாரென்பதும் அவர் விடுதலைப் புலிகளுடனான மோதலில் இறந்துபோனாரென்பதும் எனக்குத் தெரியாது.
மேலும், அவர் எப்பகுதியில் எப்போது இறந்தாரென்ற விடயமும் எனக்குத் தெரியாது.
அத்துடன், ஜகாங்கீர் மூதூர் நகர பஸ் நிலை பொலிஸ் சோதனைச் சாவடியில்தான் கடமையாற்றினாரென்பதும் தெரியாது.
எமது பொலிஸ் நிலையத்திலிருந்து மூதூர் நகருக்கு சென்றிருந்த கொமாண்டோப் படையினர் வேறுபட்ட நேரங்களில் மாறுபட்ட எண்ணிக்கையில் எமது பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிவந்தனர்.
ஆனால், முதலில் நான்கோ அல்லது ஐந்தோ படையினர்தான் எமது பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.
மூதூர் நகரில் நடந்த மோதல்களில் இறந்த படையினர் ஒருவரின் உடலை இறங்குதுறைக்கு அனுப்பிவிட்டே அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர். மூதூர் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் பலியானார். இந்நிலையில் அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட்ட படையினரில் குறிப்பிட்ட நான்கோ ஐந்து பேர் திரும்பி வரும்பொழுது காலை ஏழு மணியிருக்கும்.
பெரிய பாலம் பகுதியிலுள்ள அகதிமுகாமிற்கு அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே குறிப்பிட்ட வீரர் பலியானார்.
கட்டை பறிச்சான் வீதியும் பெரிய பாலம் வீதியும் சந்திக்கின்ற சந்திக்கு அண்மித்த பகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றிலேயே இந்த அகதிமுகாம் இருந்தது. ஆனால், அப்பாடசாலையின் பெயர் எனக்குத் தெரியாது.
இந்நிலையில், மூதூரிலுள்ள அனைத்து மக்களும் அங்கிருந்து கந்தளாய் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தனர். மோதலினால், மூதூர் நகரிலுள்ள கடைகளும் ஏனைய கட்டிடங்களும் சேதத்திற்கு உள்ளானது.
ஆகஸ்ட் நான்காம் திகதி எமது பொலிஸ் நிலையமும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.
இறால் குழிப்பக்கமிருந்து எமது பொலிஸ் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தது. எமது பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த போது காலை பத்துமணியிருக்கும்.
ஷெல் தாக்குதலைத் தவிர வேறு வகையான தாக்குதல்கள் எமது பொலிஸ் நிலையத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், அன்று முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் வெடிச் சத்தங்களும் கட்டைபறிச்சான் பிரதேசத்திலிருந்தும் இறங்குதுறை, இறால்குழி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் கேட்ட வண்ணம் இருந்தன.
பின்னர் இத்தாக்குதல் சத்தங்கள் மூதூர் நகரையைண்டிய பிரதேசங்களிலிருந்தும் கேட்டன.
அன்றிரவும் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. மறுநாள் ஐந்தாம் திகதி மாலை தான் இச்சத்தங்கள் குறைந்தன.
நான்காம் திகதி மூதூர் நகருக்குச் சென்ற கொமாண்டோப் படையினரில் நிலந்த மற்றும் சுசந்த என்பவர்கள் போனதாக எனக்குத் தெரியாது.
இந்நிலையில், 2006 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி சரத் முள்ளேரியா என்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எமது பொலிஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் ஐந்தாம் திகதியோ அல்லது ஆறாம் திகதியோ தான் எமது பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.
ஆனால், கபில ஜெயசேகர என்ற பொலிஸ் அதிகாரியும் ரணவீர என்ற பொலிஸ் அதிகாரியும் 5 ஆம் திதி நள்ளிரவு தான் எமது பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், சரத் முள்ளேரியா, கபில ஜெயசேகரவின் வருகைக்குப் பின்னரேயே பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.
இதனைத் தெரிந்து கொண்டு சரத் முள்ளேரியா நான்காம் திகதி எமது பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லையென்றும் ஆறாம் திகதியோ அல்லது ஏழாம் திகதி தான் வந்திருப்பாரென்றும் உறுதியாகக் கூற முடியும்.
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.
கபில ஜெயசேகர மற்றும் ரணவீர ஆகியோர் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக சென்ற பின்னர் தான் இப்படுகொலை தொடர்பாக எனக்குத் தெரியும். அதுவரையில் எனக்குத் தெரியாது.
மூதூர் நகர சபை அங்கத்தவரான ராஜீஷ் என்பவரை எனக்குத் தெரியும். ஒருதடவை எமது பொலிஸ் நிலையத்திற்கு அவர் வந்த போது தான் தெரியும்.
ஆனால், அதற்கு முன்னரோ சரி பின்னரோ சரி எந்த விதமான தொலைபேசித் தொடர்புகளையோ அல்லது வேறு எந்தத் தொடர்புகளையோ ராஜீஷுடன் நான் வைத்திருக்கவில்லை.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில், நீதிபதி மிகுந்த பாதுகாப்புடன் இறங்குதுறைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக கொமாண்டோப் படையினரும் இறங்குதுறை வரை சென்றிருந்தனரெனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் இவரது சாட்சியம் நிறைவு பெற்றது. மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை குறிப்பிட்ட சாட்சி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார்.