* பிரதி அமைச்சர் தெரிவிப்பு
`விசாரணைக்குப் பின்னர் விடுவிப்போம்' என்று கூறி கண்டி மெதமாநுவர வேவதன்னை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிலியந்தலை பகுதியில் இரும்புப் போத்தல் கடை நடத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்து, கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.
வேவதன்னை தோட்டத்தைச் சேர்ந்த மெய்யன் அமிர்தலிங்கம், செய்யன் சண்முகநாதன், மெய்யன் பாலச்சந்திரன், ராமலிங்கம் சிவகுமார், கதிர்வேல் சபாபதி, மாரிமுத்து ராஜேந்திரன், சண்முகம் மோகன்ராஜ் என்பவர்களே கடந்த 26.04.2008 இரவு பிலியந்தலை பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் சகோதரியான மெய்யன் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் கடந்த 25.04.2008 மாலை இடம்பெற்ற பஸ்குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின்போதே இவர்கள் 7 பேரும் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதாகக் கூறிய பொலிஸார் தற்போது இவர்களை கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் மகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.
இவர்களுடன் பழனியாண்டி துரைராஜா, கோபால் விஜயரட்ணம், ஷ்ரீராம் ஷ்ரீகாந்த், சொக்கலிங்கம் வீரகுமார், எம்.திருவருட்செல்வம், பி.சத்தியராஜ், கே.விஜயகுமார், சுப்பிரமணியம் கேசவன், ஆறுமுகம் விஸ்வநாதன், ராசலிங்கம் சண்முகராஜ், பொன்னையா தியாகராஜா, கே.பந்துல ஆகிய 12 மலையக இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மெய்யன் மகேஸ்வரி மலையக இளைஞர்கள் என்று ஆவணங்களை உறுதிப்படுத்தி ஒப்படைத்தபோதும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று மேலும் தெரிவித்தார்.
இவர்களின் கைதுகள் தொடர்பாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் பெரேராவுடனும் பயங்கரவாத பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டதையடுத்து இன்று 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்குறிப்பிட்ட 19 இளைஞர்களும் கெஸ்பாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞர்களை விடுவிப்பதற்கு சட்டத்தரணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.