கிழக்கு மாகாண சபை தேர்தல் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் தமது எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் அபிப்பிராயத்தையும் தினக்குரலுடன் நேற்று வியாழக்கிழமை பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் கூறியவற்றை இங்கு தருகின்றோம்.
மாவை சேனாதிராஜா
இதுகுறித்து தமிழரசுக் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்;
"தமிழ் மக்கள் மீது அரசாங்கம் தேர்தலை திணித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இத்தேர்தல் குறித்த வேண்டுகோளானது அரசாங்கமும் அவர்களது கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.
சிங்களப் பேரினவாதம் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தும் திட்டத்திற்கெதிராக தமிழ், முஸ்லிம்கள் இத்தேர்தல் மூலம் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.
ரவூப் ஹக்கீம்
இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகையில்;
`தேர்தல் வாக்களிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். அமைச்சர்கள் தமது ஏராளமான ஆதரவாளர்களுடன் கிழக்கு வந்து தேர்தல் மோசடிக்காக காத்திருக்கிறார்கள். இதை நாம் தேர்தல் ஆணையாளரின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு சென்று சுதந்திரத் தேர்தலை வலியுறுத்துகிறோம்.
கிழக்குத் தேர்தல் குறித்து அரசு பீதியடைந்துள்ளது. ஐ.தே.க. இத்தேர்தலில் ஈட்டவுள்ள வெற்றியுடன் ஏற்கனவே ஆளும் தரப்புக்கு தாவியவர்கள் மீண்டும் ஐ.தே.க. பக்கம் திரும்பலாமென்பதற்காகவே பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கைப் பிரித்ததன் மூலம் அங்குள்ள தமிழ், முஸ்லிம் சமூகத்தைப் பிரித்துத் துருவப்படுத்தும் முயற்சிக்கு இத்தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதன் மூலம் முடிவு கட்டப்பட வேண்டும்.
அதேவேளை, தமிழ் மக்களின் கணிசமான ஆதரவின்றி வெற்றியை அடைய முடியாது. நிரந்தர தீர்வுக்கு முன் இரு சமூகங்களும் ஒன்றுபடுவதன் அவசியத்தை இத்தேர்தல் எமக்கு உணர்த்துகிறது.
அரசாங்கத்தின் அராஜகத்துக்கு சாவு மணியடிக்கும் வகையில் இத்தேர்தலை தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படுத்த முன்வர அழைப்பு விடுக்கிறேன்."
பசில் ராஜபக்ஷ
ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறுகையில்;
"கிழக்கு மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். எனவே, எமக்கு வெற்றி நிச்சயம். அவர்கள் மாகாண அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைக்க தயாராகிவிட்டனர். இதனை ரணில், பிரபா, ஹக்கீம் முக்கூட்டு அணியினால் தடுக்க முடியாது.
நீதியும் நியாயமுமிக்க தேர்தல் நடைபெறுமென்பதை அரசாங்கத்தின் சார்பில் பொறுப்புடன் கூறுகிறேன். தோல்வியின் அச்சத்தில் மோசடி நடைபெறுமென எதிரணியினர் பிதற்ற ஆரம்பித்துள்ளனர்.
பிள்ளையான் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. சட்டத்தையும் ஒழுங்கையும் பேண பொலிஸாருடன் முப்படையினரும் தயாராயுள்ளனர்."
விஜித ஹேரத்
ஜே.வி.பி.யின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் கூறுகையில்;
பிள்ளையானும் ரவூப் ஹக்கீமும் கிழக்கில் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இனவாதத்தை வெறுத்து நாட்டை நேசிக்கும் சக்திகள் ஜே.வி.பி.க்கு இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
பிள்ளையான், பிற ஆயுதக் குழு, அரசாங்க அமைச்சர்கள் என பலர் மோசடி வாக்களிப்புக்குத் தயாராயுள்ளனர். இது ஜனநாயகத்திற்கான சவாலாகும். இதனை வெற்றி கொள்ள முன்வருமாறும் கிழக்கை மீட்டதன் உண்மை பயனை அனுபவிக்க ஒன்றுபடுமாறும் ஜே.வி.பி. அழைப்பு விடுக்கிறது.
இத்தேர்தலில் கிழக்கு மாகாண அதிகாரத்தை ஜே.வி.பி. கைப்பற்றாவிட்டாலும் மாகாண அதிகாரத்தை இயக்குவிக்கும் கருவியாக ஜே.வி.பி. செயற்படுமென்பதை உறுதியுடன் கூறவிரும்புகிறேன்."