* தொழிற்சங்க நடவடிக்கைக்கு தடைவிதிக்க பரிசீலனை; அமைச்சர் நிமால்
இரத்தினபுரி வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் 3 நோயாளர்கள் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சூளுரைத்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வா, நோயாளிகளை பணயம் வைப்பதா தொழிற்சங்கப் போராட்டத்தின் இலட்சணம் எனவும் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
`நான் சட்டத்தரணி தொழிலிலும் தேர்ச்சி பெற்றவன். எனவே, போராட்டத்திலீடுபட்ட தாதியர்களினால் அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குற்றவாளிகள்" அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நான் தயங்கமாட்டேன்.
குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோயாளிகளை பணயம் வைப்பதை எந்த மதம்தான் அனுமதித்துள்ளது? இதுதான் இவர்களின் தொழிற்சங்க இலட்சணமா?
சுகாதார தொழிற்சங்கப் போராட்டத்தைத் தடைசெய்வது பற்றி அமைச்சு தீவிரமாக ஆராய்கிறது. தொழிற்சங்கங்களின் மக்கள் விரோதச் செயற்பாட்டைக் கண்டிக்க மக்கள் முன்வர வேண்டு" மென்றார்.
இதுபற்றி அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறுகையில்;
"3 நோயாளிகள் இறப்புக்கு வைத்தியர்களே காரணம். அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும்படி நாம் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை கூறுகிறோம். வைத்தியர்களுக்கு சாதகமாக செயற்படும் சுகாதார அமைச்சு எமது தொழிற்சங்க உரிமையை அடக்க முயன்றால் முழு அரச சேவையாளர்களும் வீதியில் குதிப்போம்.
நிமால் சிறிபாலவின் கர்ஜனைக்கு அஞ்சி நாம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரமாட்டோம். அவசர நிலையிலுள்ள நோயாளிகளை எமது தாதியர்கள் தொடர்ந்து பராமரிக்கின்றனர்" என்றார்.
இதேவேளை, 3 நோயாளிகளின் மரணத்தினால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு வைத்தியசாலையிலிருந்து நோயாளிகள் பலர் வெளியேறியுள்ளதாகவும் கூறியது.