பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டு பின் ஒரு மாதம் அந்தத் தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சொய்ப் அக்தர் விவகாரம் ஒரு சிறந்த பொலிவூட் நகைச் சுவை என்று முன்னாள் கப்டன் வசீம் அக்ரம் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த வசீம் அக்ரம் "முதலில் நீங்கள் தடை செய்கிறீர்கள், பிறகு அவருக்கு வசதி செய்து தரும் விதமாக தடையை இரத்துச் செய்கின்றீர்கள். அதன் பின் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப், அக்தர் ஆகியோர் தொலைக்காட்சியில் தோன்றுகின்றனர். அரசியல் வாதி ஒருவர் தலையிட்டு சமரசம் செய்து வைக்கின்றார். உடனே நசீம் அஷ்ரப் வழக்கை திரும்பப் பெறுகின்றார். ஒரு நல்ல பொலிவூட் இயக்குநர் இதனை வைத்து ஒரு சிறந்த நகைச்சுவைப் படம் எடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும், சொய்ப் அரசியலில் சேர்ந்தால் அவருக்கு அங்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்.
4 மாத காலம் கிரிக்கெட் பக்கமே தலை வைத்துப் படுக்காத சொய்ப் அக்தர் எவ்வாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திறமையுடன் விளையாட முடியும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்;
"மைதானத்தில் நிரம்பி வழியும் ரசிகர்கள், சியர் லீடர் வகை கவர்ச்சிக் கன்னிகள் ஆகியோர் இருக்கையில் அக்தர் திறமையை வெளிப்படுத்த நிச்சயம் பாடுபடுவார். ஏனென்றால் அவர் விளம்பரத்தில் புகழடைய விரும்புபவர்" என்றும் கூறியுள்ளார் அக்ரம்.