விதுரன்
யாழ்.குடாநாட்டை கடல் வழியால் பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு தொடர்ந்தும் அடிவிழுகிறது. வன்னியில் பலமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைகள் தொடர்கையில் விடுதலைப்புலிகளின் பார்வை யாழ்.குடாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குடாநாட்டின் மீதான நெருக்குதலை புலிகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
யாழ்.குடாநாட்டின் மீது தரைவழியால் மேற்கொள்ளப்படும் நெருக்குதலில் புலிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்கையில் கடல் வழியால் நெருக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடாநாட்டுக்கு இரு வழிக் கடல் பாதைகளுள்ளன. இந்தக் கடல்வழிப் பாதைகளூடான நெருக்குதல்களையே புலிகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால், முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி ஊடான வடபகுதிக் கடற்பரப்பிலும் மன்னார் மற்றும் நெடுந்தீவு ஊடான மேற்கு கடற்பரப்பிலும் கடற்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் டோரா பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டதும், திருகோணமலைத் துறைமுகத்தினுள் விநியோகக் கப்பலான, எம்.வி. இன்வின்சிபிள், அழிக்கப்பட்டதும் யாழ்.குடாவுக்கான கடல்வழிப் பாதுகாப்பையும் விநியோகப் பாதையையும் புலிகள் தகர்க்கத் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
யாழ்.குடாவைப் பொறுத்தவரை கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவிலூடாகவே தரைவழியாலான புலிகளின் அச்சுறுத்தலுள்ளது. ஆனையிறவு படையினரின் வசமிருந்தபோது குடாநாட்டின் பாதுகாப்பை அவர்கள் முழுமையாக உறுதி செய்திருந்தனர். ஆனையிறவின் அதிஉயர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பூநகரியிலிருந்து படையினர் விலகியிருந்தனர். இன்று பூநகரி மற்றும் அதனை அண்டிய கல்முனைப் பகுதியே குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருக்கையில், ஆனையிறவுத் தளத்தின் உச்சநிலைப் பாதுகாப்பால் படையினர் பூநகரியிலிருந்து விலகியிருந்தனர்.
பின்னர் 1996 இன் பிற்பகுதியில் படையினர் கிளிநொச்சியையும் கைப்பற்றிவிடவே குடாநாட்டின் பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படத் தேவையில்லையென்ற நிலையேற்பட்டது. எனினும், கிளிநொச்சியையும் பின்னர் ஆனையிறவையும் புலிகள் கைப்பற்றிவிடவே யாழ்.குடாநாடு எவ்வேளையிலும் புலிகள் வசமாகி விடலாமென்றதொரு நிலையேற்பட்டது.
2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியை தொடர்ந்து புலிகள் யாழ்குடா மீதான முற்றுகையை ஆரம்பித்தபோது, ஆனையிறவு முகமாலையூடான தரைவழி முன்நகர்வை விட பூநகரி கல்முனை ஊடான கடல்வழி நகர்வே புலிகளுக்கு பெரிதும் கைகொடுத்திருந்தது.
புலிகள் குடாநாட்டின் மீதான முற்றுகையை கைவிட்டபின். கிளாலி முகமாலை நாகர்கோவில் என்ற அச்சில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை மிகவும் வலுவாக அமைத்து, புலிகளால் இலகுவில் தகர்க்க முடியாதவாறு படையினர் இன்றுவரை அப்பகுதி பாதுகாப்பை பேணி வருகின்றனர். இதனால் தான் 2000 ஆம் ஆண்டின் போதும் சரி 2006 ஆம் ஆண்டின் போதும் சரி புலிகள் குடாநாடு மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்திய போது புலிகளால் கிளாலி மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளை தகர்த்துக்கொண்டு அப்பால் செல்ல முடியவில்லை.
2006 இல் முகமாலை முன்னரங்க நிலைகளை அழித்த புலிகளுக்கு அதனோடு அண்டிய எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துச் செல்வதில் பெரும் நெருக்கடிகளிருந்தன. எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலை மட்டும் தகர்க்கப்பட்டிருந்தால் கிளாலியில் படையினர் பொறிக்குள் சிக்கியிருப்பர். குடாநாடு மீதான புலிகளின் முற்றுகையும் சாத்தியமடைந்திருக்கும். எனினும், தற்போது கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளை மிக வலுவாக வைத்திருக்கும் படையினருக்கு புலிகளின் கடல்வழி அச்சுறுத்தலே பெரும் தலையிடியாக உள்ளது.
மண்டைதீவு முதல், யாழ் கரையோரத்தை அண்டி தென்மராட்சி வரை விரிந்து செல்லும் நீண்ட கடற்பரப்பு கடல்நீரேரியாகும். இது ஆழம் குறைந்த பரவைக்கடல். இதனால், இந்தக் கடல் நீரேரியில் நீருந்து விசைப் படகுகள் (வாட்டர் ஜெற்) மற்றும் சிறிய ரகப் படகுகள் மூலமே குடாநாட்டின் தெற்கு கரையோரப் பாதுகாப்பை கடற்படையினரால் பலப்படுத்த முடியும்.
புங்குடுதீவுக்கு அப்பால் நெடுந் தீவுக் கடற்பரப்பு மிகவும் ஆழமான தென்பதால் அந்தக் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளின் தீவிர கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகமிருக்கும்.
இந்த நிலையில் கடற்புலிகளின் பலமானது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே உள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து புலிகளின் அணிகள் பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து கடல் வழியாகச் சென்றே தென்மராட்சியின் தனங்கிளப்பு கரையிலும் யாழ்ப்பாணம், அரியாலை கரையிலும் தரையிறங்கி உட்சென்று பாரிய தாக்குதலைத் தொடுத்திருந்தனர். இதனால், தற்போது யாழ். கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டு கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
தென்மராட்சி தெற்கின் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்சமட்டத்தில் அதிகரித்துள்ள அதேநேரம் கிளாலி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற் படையினர் கரையோரத்தில் 24 மணிநேர கடல்ரோந்தை மேற்கொண்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர். அதேபோல் மண்டைதீவு முதல் அரியாலை வரையான யாழ்நகரின் தென்பகுதிக் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்ச மட்டத்தில் வைத்திருப்பதுடன் யாழ். கடல்நீரேரியில் மண்டைதீவு கடற்படையினரும் குருநகர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் 24 மணிநேர படகு ரோந்தில் ஈடுபட்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர்.
யாழ்.குடாநாட்டிற்கு வடமராட்சி கிழக்கு கடற்பரப்பூடாக வரும் கடற்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்க காங்கேசன்துறை கடற்படையினர் ஆழ்கடல் ரோந்துகளை மேற்கொள்கையில் கரையோரங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் புலிகள் கடல்வழித் தாக்குதல்களை அல்லது தரையிறக்கங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக கடலை நோக்கி சகல பகுதிகளிலும் ஆட்லறிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடற்சமர் நடைபெற்று கடற்புலிகளின் கையோங்கும் போது கடலை நோக்கி ஆட்லறிகளும் ஷெல்களைப் பொழிந்து தங்கள் பாதுகாப்பின் இறுக்கத்தை பறைசாற்ற முயலும்.
இவ்வாறு யாழ். குடாவின் தரைவழிப் பாதுகாப்பையும் கடல்வழிப் பாதுகாப்பையும் இராணுவத்தினரும் கடற்படையினரும் உறுதி செய்ய முயல்கையில் யாழ். கரையோரப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டின் மீது புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த போது மண்டைதீவு கடற்படைத் தளம் மீதும் புலிகளின் ஈரூடகப் படையணி கடும் தாக்குதல் நடத்தியது.
மண்டைதீவு கடற்படைத்தளம் பாரியது. இந்த "வேலுசுமண' ராடர் நிலையமும் கடற்படகுகளின் தரிப்பிடம் அல்லது இறங்குதுறையும் மிகவும் வலுவாக உள்ளன. இங்கு புலிகளின் ஈரூடக அணிகள் தரையிறங்கி தென்பகுதியிலிருந்த கடற்படைத்தளம் மீது நீண்டநேரத் தாக்குதலை நடத்தியிருந்தன. எனினும், அது குறிப்பிடத்தக்களவு விளைவை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையிலேயே யாழ்.கரையோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டது. கரையோரத்தில் யாழ்.கோட்டை முதல் கொழும்புத்துறைக்கு அப்பால் வரை கரையோரத்தில் பாரிய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. கடலுக்கடியிலும் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டன. கரையோரத்தில் முன்னரங்க காவல்நிலைகளில் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து 24 மணிநேரமும் யாழ்.கடல் நீரேரி கண்காணிக்கப்படுகிறது. குருநகர், பாஷையூர் மற்றும் கொழும்புத்துறை மீனவர்கள் கூட அந்தந்தப் பகுதிகளிலுள்ள கடற்படையினரின் இறங்கு துறைகளாலே கடற்றொழிலுக்குச் செல்ல பலத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
2006 இல் மண்டைதீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து யாழ்.கரையோரப் பாதுகாப்புக்கு புலிகளால் பெரும் அச்சுறுத்தலேற்பட்டது. பூநகரி மற்றும் கல்முனை பகுதியிலிருந்து யாழ். கரையோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாயிருக்கும் கடற்புலிகளைக் கண்காணிக்க மண்டைதீவு கடற்படைத்தளம் வசதியானதாயிருந்தாலும் அத்தளம் மீதான புலிகளின் தாக்குதலானது, மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து யாழ். கரையோரத்தை கண்காணிப்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியது. மண்டைதீவின் கிழக்கு பகுதியில் தான் கடற்படைத்தளமுள்ளது. மண்டைதீவின் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமானது. கண்டல்காடுகளும் உள்ளது. இதைவிட மண்டை தீவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே சிறுத்தீவு என்றொரு தீவு உள்ளது.
மண்டைதீவிலிருந்து, குருநகர் முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான யாழ். கரையோரத்தை நேரடியாகக் கண்காணிக்க முடியாதவாறு சிறுத்தீவு மறைத்துக் கொண்டிருப்பதால், மண்டைதீவு கடற்படையினரின் நேரடிக் கண்காணிப்புக்குள் யாழ்.கரையோரம் வரவில்லை. இதைவிட பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து மண்டைதீவு கடற்படைத் தளம்மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்கும் வாய்ப்புமுள்ளது. இது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமென்பதால், மண்டைதீவிலும் கடற்படை முகாமொன்றை வைத்துக்கொண்டு மண்டைதீவுக்கும் யாழ். கரையோரத்திற்குமிடையிலுள்ள சிறுத்தீவிலும் சகல வசதிகளுடன் கூடிய கடற்படை முகாமொன்றை அமைக்க படையினர் திட்டமிட்டனர்.
பண்ணை முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான கடல்நீரேரியையும் யாழ். கரையோரத்தையும் கண்காணிக்கும் விதத்தில் சிறுத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. சிறுத்தீவானது மண்டைத்தீவிற்கு வடக்கே அரைக் கிலோமீற்றர் தூரத்திலும் குருநகருக்கு தெற்கே சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலும் பண்ணைப் பாலத்திலிருந்து முக்கால் கிலோமீற்றர் தூரத்திலும் இருப்பதுடன் இங்குள்ள கடற்படை முகாமிலிருந்து யாழ்.கரையோரத்தை கடல் நீரேரியூடாக கண்காணிப்பது மிகச் சுலபம்.
(தொடர்ச்சி Sunday Thinakkural பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)