கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெள்ளவத்தை காலி வீதியில் கடற்கரைப் பக்கமாக ராஜசிங்க வீதிக்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தின் மீதே நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே பஸ் நிலையத்தில் நின்றவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பாரிய சத்தத்துடன் குண்டுவெடித்ததால் வெள்ளவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் அதிரவே எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கைக் குண்டுத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் படுகாயமடைந்த நிலையில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் ஆபத்தான நிலையிலிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தை விட்டு சிதறியோடிய அதே நேரம் அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிலையங்கள் யாவும் உடனடியாக மூடப்பட்டன.
சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த படையினரும் பொலிஸாரும், படுகாயமடைந்தவர்களை வாகனங்கள் மூலம் களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்ததுடன் காலி வீதியில் கடற்கரைப் பக்கமான வீதியை ராமகிருஷ்ண மிஷன் சந்தியுடன் மூடி வாகனங்களை அந்த வீதியூடாக கடற்கரைப்பக்கமாகத் திருப்பி விட்டனர்.
இதேநேரம், கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருகின்ற போதும், கைக் குண்டு வீச்சு தொடர்பாக உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்தையடுத்து மூடப்பட்ட காலி வீதி இரவு பத்து மணிக்குப் பின்னரே திறக்கப்பட்டது.