அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களுடன் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அம்புலன்ஸ் மீதும் நோயாளர்கள் மீதும் காத்தான்குடியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சமூகம் நேற்று நண்பகல் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.
அம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதையும் நோயாளிகள் தாக்கப்பட்டதையும் கண்டித்தே நேற்று நண்பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை சமூகம் சேதமாக்கப்பட்ட அம்புலன்ஸ் சகிதம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்தது.
மத்திய வீதி ஊடாக மட்டக்களப்பு நகரை அடைந்து, பொலிஸ் நிலைய சந்திக்குச் சென்று, வாவிக் கரை வீதி ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலையினை சென்றடைந்தது.
வாவிக்கரை வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தபோது முதலமைச்சரின் அலுவலகம் இருக்கும் எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் தடுத்துநிறுத்தவே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் படுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அங்குவந்த மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.