-எம்.ஏ.எம்.நிலாம்-
முப்படையினரின் இணைந்த நடவடிக்கைகளை பலப்படுத்தும் பொருட்டு உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான சட்ட மூலமொன்றை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனையொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டும் பலப்படுத்தும் பொருட்டும் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்தப் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான யோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;பரந்தளவிலான ஆராய்ச்சிகள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலேயே இச் சட்ட மூல நகலுக்கான பிரேரணையை வரைவதற்கு இவ் அமைச்சின் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கான அலுவலகம் தயாராகியுள்ளது.
உறுதியானதும் பயன்மிக்கதும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததும் பதிலளிக்கும் கடப்பாடு வாய்ந்ததுமான உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் மற்றும் பொதுப் பாதுகாப்பு முகாமைத்துவம் என்பவற்றை உருவாக்குதல், தாக்கம் மிக்கதான ஆயுதப்படையொன்றை வழிநடத்தல் மற்றும் ஆயுதப்படைகளின் இணைந்த நடவடிக்கைகள் என்பவற்றை ஊக்குவித்தல் போன்றன இப் பிரேரணையின் முதன்மையான நோக்கங்களாகும்.
இந்நோக்கங்களை அடைவதற்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இணைந்த கீழ்வரும் அமைப்புக்களை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை இப் பிரேரணை வழங்குகிறது.
பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் கீழான பாதுகாப்புப் பேரவை, பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் தலைமையிலான தந்திரோபாய திட்டமிடல் சபை, பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரின் செயலாளர் தலைமையிலான பொதுப் பாதுகாப்பு திட்டமிடல் சபை, பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு மேற்பார்வை சபை, கூட்டுப்படைகளின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் தலைமையிலான கூட்டுப்படைத் தலைவர்களின் சபை, சிவில் இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்புத் திட்டமிடல், இணைந்த முகாமைத்துவம் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்குமான ஒன்றிணைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் சபை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டல், பாதுகாப்புடன் தொடர்புடைய ஆராய்ச்சிகள், பகுப்பாய்வுகள், அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கான அலுவலகம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சட்ட நகல் பிரேரணைகளுக்கிணங்க உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான சட்ட மூலத்தை சட்ட வரைஞர்கள் விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும்.