போதைப் பொருள் வைத்திருப்பதாக டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் குற்றச்சாட்டிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவாரென ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் உல்லாகான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் டில்லி அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப், தொடர் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் முதலாம் திகதி மும்பையிலிருந்து டுபாய் வழியாக லாகூருக்குச் சென்றார். ஆனால் டுபாய் விமான நிலையத்தில் சுங்க சோதனையின் போது, அவருடைய பையில் போதைப் பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு டுபாய் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
டுபாயில் போதைப் பொருள் தடுப்புச் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்பதால் ஆசிப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருளும், அவருடைய இரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவையும் ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது. எனவே அவரை விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்சிகளை மேற்கொண்டது.
இதன்பலனாக அவர் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய அரசு எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் உல்லாகான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ""போதை பொருள் கடத்தியது மற்றும் உட்கொண்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து ஆசிப் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த விமானத்தில் பாகிஸ்தான் திரும்புவார்' என்றார்.
இந்நிலையில் டுபாய் அரச பரம்பரையை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மரணமடைந்ததையடுத்து ஆசிப் விடுவிக்கப்படுவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இவர் நாடு திரும்பத் தாமதமாகுமெனத் தெரிகிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உயர் அதிகாரி நக்மி கூறுகையில், ""டுபாயில் அரச பரம்பரை பிரமுகரின் மரணத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுவதால் ஆசிப் விடுவிக்கப்படுவது தாமதமாகும்' என்றார்.
பங்களாதேஷில் நடக்கவுள்ள முக்கோணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிப் இடம்பெற்றிருந்தார். ஆனால் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளதையடுத்து அவருக்குப் பதிலாக சொகைல் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தேர்வுக்குழு தலைவர் சலாவுதீன் அகமது கூறுகையில்;
""ஆசிப் எப்போது நாடு திரும்புவார் என தெரியாத நிலையில், முக்கோணத் தொடரில் அவருக்குப் பதிலாக சொகைல் கான் சேர்க்கப்பட்டுள்ளார்' என்றார்.
ஆசிப் விவகாரம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் கப்டன் ரமீஸ் ராஜா கூறுகையில் ""ஆசிப் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியடையும் போதெல்லாம் இந்த மாதிரி தேவையில்லாத விடயங்கள் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. வீரர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்றார்.