ஹனோய்: பதினெட்டாவது உலகப் பெண்கள் மாநாடு நேற்று முன்தினம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஆரம்பமாகியுள்ளது.
இம் மாநாட்டில் 72 நாடுகளைச் சேர்ந்த 900 இற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றுகின்றனர்.
""உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவும் பெண்களும்' என்ற கருவை மையமாகக் கொண்டு ஆரம்பமாகியுள்ளது.
இது 21 ஆம் நூற்றாண்டில் ஆசிய பசுபிக் பொருளாதாரங்கள் சக்தி வாய்ந்ததொன்றாக தம்மை உலக சந்தையில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் இப் பிராந்தியத்தின் வர்த்தக வளர்ச்சியில் நுகர்வோராகவும் தொழிலபதிபர்களாகவும் இருக்கும் பெண்கள் இதில் ஆழமான அறிவைப் பெறுவதற்கும் இம்மாநாடு வாய்ப்பளிக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய உலகப் பெண்கள் மாநாட்டின் தலைவர் இறினி நரிவிடாட் மியன்மார், லிபியா ஆகிய நாடுகளிலிருந்து இம் மாநாட்டில் முதல் தடவையாக கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு தனது வரவேற்பைத் தெரிவித்ததுடன் அனைத்து மக்களுக்கும் இம்மாநாடு வாய்ப்பளிக்குமெனத் தெரிவித்தார். இங்கு இவர் மேலும் உரையாற்றுகையில்;
ஆசியாவையும் பெண்களையும் உள்ளடக்கிய வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. வர்த்தகத்தின் ஈர்ப்பு மையம் தற்போது மேற்குலகிடமிருந்து கிழக்கிற்கு மாறியுள்ளது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றமடைந்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தக விருத்தியை நாம் ஆராயவேண்டும். இப் பிராந்தியத்தில் தொழிலதிபர்களாக பிரகாசிக்கும் பெண்களை உங்களால் சந்திக்க முடியும். இதன்மூலம் ஆசியப் பெண்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், தலைமைத்துவத்தை ஏற்பதில்லை என்ற பழமைவாதத்தை நாம் தகர்த்துள்ளோம். இது பொருளாதாரத்தின் கட்டமைப்பு ஆண்களிடமிருந்து பெண்களுக்கு மாற்றமடையும் தருணமாகும் எனத் தெரிவித்துள்ளார்.