வாஷிங்டன்: அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவர் மரண தண்டனை கோரியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இதுபற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறை வளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை, சதிமற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை நிருபணமானால், இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.