2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவுகிறது.
சீனாவில் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டில் (824) நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டி, 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டியை நடத்துவதற்கு உலக நாடுகள் பல போட்டியிட்டு வருகின்றன. இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிடையில்தான் கடும் போட்டி இருக்குமெனத் தெரிகிறது.
இதற்கிடையே போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள், தங்களது சாதகமான அம்சங்களைத் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு விண்ணப்பித்திருந்தன. அதில் சிக்காகோ, மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ மற்றும் ரியோடிஜெனிரோ (பிரேஸில்) ஆகிய நகரங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
எப்படியும் தங்களது செல்வச் செருக்கால் வாய்ப்பை பெற்றுவிடலாமெனக் கருதப்பட்ட டோஹா (கட்டார்), பிரேகு (செக்.குடியரசு), பாகு (அஜர்பைஜான்) ஆகியன அதற்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
தேர்வு பெற்றுள்ள 4 நாடுகள், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதிக்குள் தங்களது விரிவான விருப்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு சர்வதேச ஒலிம்பிக் குழு தனது இரகசிய வாக்கெடுப்பின் மூலம், போட்டியை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்யும்.
2009 அக்டோபர் 2 ஆம் திகதி டென்மார்க்கில் கோபன்ஹேகனில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கூட்டத்தில் இறுதிநிலை தெரியவரும்.
அதற்கு முன்னதாக, சர்வதேச ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், போட்டியை நடத்துவதற்கு முதல் கட்டமாக இனம்கண்டுள்ள நாடுகள் அளிக்கும் அறிக்கையைக் கொண்டு அந்தந்த நாடுகளில் ஆய்வு செய்வதுடன், அந் நாட்டுத் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். அதிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் முடிவுகளை மேற்கொள்ளும்.
2008 ஒலிம்பிக் போட்டி ஆசியாவில் (சீனா) நடைபெறவுள்ள நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆசியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த டோக்கியோ (ஜப்பான்) முனைந்துள்ளது. இதற்கு முன் 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது.
அதேபோல் அமெரிக்காவும் 1996 அட்லாண்டா போட்டிக்குப் பின் மீண்டும் போட்டியை நடத்த (சிக்காகோவில்) உரிமை கோரியுள்ளது.
இதற்கிடையே 2012 ஆம் ஆண்டு போட்டியை நடத்தப் போட்டியிட்ட மாட்டிரட், இம்முறையாவது அந்த வாய்ப்பை பெற்றுவிட வேண்டுமென்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த முறை நடந்த போட்டியில் 3 ஆவது இடத்தைப் பிடித்து வாய்ப்பையிழந்தது. லண்டன் உரிமையைத் தட்டிச் சென்றது.
ரியோடிஜெனிரோ முதல் முதலாக தென் அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட வேண்டுமென்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. இது, கடந்த ஆண்டு பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டியை நடத்தியதை சாதகமான அம்சமாகக் கொண்டு, உரிமை கோரியுள்ளது.