Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
[08 - June - 2008] [Font Size - A - A - A]
யோ. நிமல்ராஜ்

கடந்த ஐந்து மாதங்களாக உலகின் கவனத்தை தன்வசப்படுத்தியிருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வுக்களம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பாளர் தேர்வில் பராக் ஒபாமா ஈட்டியுள்ள வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்வதில் அமெரிக்கா கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்ததுடன் இத்தேர்தல் களம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் அநேகமான தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அரிசோனா மாநில செனட்டரான ஜோன் மெக் கெய்ன் தெரிவாகி இருந்தார்.

ஆனால், ஜனநாயகக் கட்சியின் தேர்தல் களமோ இறுதிவரை இவர்தான் வேட்பாளர் என்பதனைத் தீர்மானிக்க முடியாத நிலையில் ஒபாமாவும் ஹிலாரி கிளின்டனும் மாறி மாறி பெற்ற வெற்றிகள் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புகளை ஏமாற்றிக் கொண்டிருந்தன.

இல்லினொய் செனட்டரும் கறுப்பின வம்சாவளி இனத்தவருமான பராக் ஒபாமா, கென்யாவைச் சேர்ந்த கறுப்பினத் தந்தைக்கும் கன்சாளைச் சேர்ந்த வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர்.

இருவடன் போட்டிக் களத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைத் தனதாக்கிக் கொள்வதற்காக ஹிலாரி கிளின்டன் தீவிர பிரசாரத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டுவந்தார்.

கணவன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என்ற பின்னணியை தன்னகத்தே கொண்டிருந்த ஹிலாரிக்கு அரசியல் பின்னணி, உயர்மட்ட செல்வாக்கு, முக்கியமான மாநிலங்களில் பெற்றுக் கொண்ட வெற்றிகள் மேலும் உறுதுணையாக இருந்தன. அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்கு 2025 பேராளர்களை திரட்ட வேண்டிய நிலையில் இருவரும் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, 1191 பேராளர்களை வெற்றிகொண்டால். வேட்பாளராகலாம் என்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் 1232 பேராளர்களை தன்வசப் படுத்தியதன் மூலம் குடியரசுக் கட்சியின் வேட்பாளரானார் மெக்கெய்ன்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி 2154 பேராளர்களையும் 389 சிறப்பு பேராளர்களையும் பராக் ஒபாமா பெற்றுள்ள அதேவேளை 1919 பேராளர்களையும் 282 சிறப்புப் பேராளர்களையும் பெற்றுள்ளார் ஹிலாரி கிளின்டன்.

இப் பேரளார்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் ஹிலாரிக்கும் ஒபாமாவுக்கும் இடையில் பேராளர்களிலும் சரி சிறப்புப் பேராளர்களிலும் சரி பாரியதொரு தொகைமாற்றத்தினை காணக்கூடியதாக இல்லை.

இருந்தாலும் இருவரினதும் பிரசார அணிகளில் பாரிய வித்தியாசமொன்று காணப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பராக் ஒபாமாவைப் பொறுத்தவரையில் தனது பிரச்சாரக் குழுவில் எந்தவொரு முரண்பாடுகளையோ அல்லது நிதிப் பற்றாக் குறையையோ சந்தித்திருக்கவில்லை.

ஆனால், ஹிலாரியின் பிரசாரக் குழு இக்குறிப்பிட்டதொரு காலத்தில் பாரிய மாற்றங்களைச் சந்தித்திருந்தது.

அதாவது, பிரசாரச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டும் பதவி விலகிக் கொண்டும் இருந்தனர்.

இருந்தாலும் தான் ஒபாமாவை விட எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தனது கணவன், மகள் ஆகியோரை ஆயுதங்களாகக் கொண்டு புதிய பரிணாமத்தில் பிரசாரப்போரை முன்னெடுத்திருந்தார்.

கணவன் கிளின்டன் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அகில அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாமென்றதொரு நோக்குடன் ஹிலாரி செயற்பட்டிருக்கலாம்.

இருந்தாலும் பில்கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது செங்கோல் செலுத்தியிருந்தாலும் தனது பதவிக்காலத்தில் புரிந்த காதல் லீலைகள் அம்பலமாகியிருந்தமை கிளின்டனின் செல்வாக்கில் கறைபடிந்த விடயமாகியது.

இருப்பினும் கிளின்டன் பிரசாரப் பணியில் மனைவிக்காக தளராத வேகத்துடன் ஈடுபட்டு வந்தார்.

அத்தோடு ஹிலாரியின் மகள் பல்கலைக்கழக மாணவியாக இருந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் மட்டுமல்லாது ஏனைய இளம் மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறாக பல்வேறு முகங்களில் ஹிலாரி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் நிதி நெருக்கடி அவரது பிரசார போருக்கு பாரிய தடையாக இருந்தது.

ஏனெனில் தேர்தலுக்கான நிதி சேகரிப்பு விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே பராக் ஒபாமாதான் முன்னணியில் இருந்தார்.

இந்நிலையிலும், தொடர்ந்து ஒபாமாவுக்கு எதிரான போட்டியில் ஹிலாரி ஓடிக்கொண்டே இருந்தார்.

ஒபாமாவின் பிரசாரத்தை பொறுத்தவரையில் தானும் தனது குடும்பத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் ஒபாமாவின் பிரசார அணியில் எதுவிதமான குழப்பங்களும் மாற்றங்களும் இடம்பெறவில்லை.

ஆரம்பத்தில் ஒபாமாவுக்கு கறுப்பினத்தவர் என்ற ரீதியில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் நாளடைவில் அது மறைந்து போயுள்ளதென்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

அத்துடன் அமெரிக்காவின் பிரதான கட்சியொன்றின் ஜனாதிபதி வேட்பாளராக கறுப்பினத்தவர் ஒருவர் நியமனம் பெறுவது தொடர்பாகக் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மையை தனது வெற்றிவாகை மூலம் முறியடித்து வரலாறு படைத்துள்ளார் பராக் ஒபாமா.

இதேவேளை, அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முதலாவதாக நியமிக்கப்படும் ஆபிரிக்க அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவராக பராக் ஒபாமா விளங்குகின்றார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தெரிவாகியுள்ள நிலையில் ஒபாமாவுடன் இணைந்து துணை ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி போட்டியிடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேட்பாளர் தெரிவில் வெற்றியீட்டியிருக்கும் ஒபாமா, கடந்த சில மாதங்களாக சிதறுண்டிருக்கும் கட்சியை ஐக்கியப்படுத்தி அரசியல் எதிரியான குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மெக் கெய்னுடனான போட்டியிலும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதில் உறுதியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறந்த மனோ தைரியமும் முற்போக்குக் கொள்கைகளையும் கொண்ட ஒபாமா அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.

அத்துடன், பிரசார நடவடிக்கைகளில் அந்நியோன்யம், எளிமை போன்றனவும் ஒபாமாவுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விடயமாக இருந்துள்ளது.

ஹிலாரியின் பிரசாரங்களில் ஈடுபடுவதில் தான் பெருமையடைவதாக பில் கிளின்டன் கூறியிருந்தாலும் தனது பதவிக்கால வாழ்வுகண்ட காதல் அத்தியாயத்தால் அவ்வளவான ஆதரவாளர்களை கிளின்டன் திரட்ட முடியவில்லை.

இதேவேளை, இத்தேர்தல் போட்டியில் ஹிலாரி சரித்திரம் படைத்திருக்கிறாரென்றும் பெண் என்ற ரீதியில் மட்டுமல்லாது இதுவரை எந்தவொரு பெண்களும் செய்திராத அளவுக்கு தனது அறுபதாவது வயதிலும் சாதனை படைத்து பல இலட்சக் கணக்கான அமெரிக்கர்களின் ஆதரவை பெற்றுள்ளாரெனவும் ஒபாமா பாராட்டியுள்ளார்.

இதேவேளை, துணை ஜனாதிபதிகளான பட்டியலில் செனட்டர் சுக் ஹாஜில் மற்றும் நியூயோர்க் மேஜர் மைக் புளும்போ போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளமையால் துணை ஜனாதிபதித் தெரிவில் ஒபாமா எத்தகைய முடிவை மேற்கொள்ளவுள்ளாரென்பதை எதிர்வு கூறமுடியாதுள்ளது.

இவ்வாறாக ஹிலாரி கண்ட நிதி நெருக்கடியிலும் பிரசாரப் பிரிவு கண்ட பின்னடைவுகளிலும் ஒபாமாவின் வெற்றி மலர்ந்துள்ளது.

வேட்பாளரானாலும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெள்ளை, கறுப்பு என்ற இனப் போராட்டம் மீண்டும் நவம்பரில் தொடரவுள்ள நிலையில் அமெரிக்கர்களின் தெரிவு எவ்வாறாக அமையுமென்பதை உலகமே ஆவலுடன் உற்று நோக்கியுள்ளது.

சர்வதேச விவகாரங்களில், எதுவிதமான அழைப்புகளுமின்றி களமிறங்கும் அமெரிக்காவின் புஷ் நிர்வாகத்தின் போர் வெறியாலும் ஆக்கிரமிப்பு அராஜக் கொள்கைகளாலும் வெறுப்புற்றிருக்கும் அமெரிக்கர்களும் அனைத்துலக நாடுகளும் சர்வதேச ரீதியிலான அமைதி பேணும் தலைமைத்துவ மாற்றமொன்றிற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகியுள்ள ஒபாமா ஜனாதிபதியானால் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
ஏன் இந்தத் தாக்குதல்கள்?
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு
எதிரணியினரின் போராட்டமும் அசைந்து கொடுக்காத அரசும்!
சிங்கள மக்களின் பிரச்சினை என்ன?
ஊடகங்களுக்கு எதிரான போர்ப் பிரகடனம்!
கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம்
பெற்றோலிய விலை உயர்வு: காரணங்களும் தாக்கங்களும்
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி?
குடாநாட்டை கலக்கும் கொள்ளையர்கள்!
ஹிலாரியின் பிரசாரப் பின்னடைவில் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி
மகிந்தவின் சுக்கிர திசை தொடர்கிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com