இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்களைத் தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், ஆயிரம் கிலோ வெடிமருந்துகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மூன்று பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளால் 1000 கிலோ வெடிபொருட்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களையும் பொலிஸார் ராவல்பிண்டியில் கைப்பற்றினர். பின்னர் அதிலிருந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தனர். உளவுத் துறை அளித்த தகவலையடுத்து இந்தச் சம்பவம் முறியடிக்கப்பட்டதாக பிரதமரின் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்தார். ராவல்பிண்டியில் உள்ள அதிபர் முஷாரப்பின் அலுவலகத்தையும் தீவிரவாதிகள் குறிவைத்ததாகத் தெரிகிறது.