* பிரதமர் கிலானி
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மக்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியை இந்திய பத்திரிகையாளர் குல்தீப் நையார் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது கிலானி கூறியதாவது: தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அமைதியை ஏற்படுத்தவும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும். காஷ்மீர் மக்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு ஏற்பட இந்தியாவும் பாகிஸ்தானும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி உள்ள காலகட்டத்தில் எல்லாம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட்டு வந்துள்ளது.
இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது இதற்கான பல நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இரு நாட்டு மக்களிடையே நேரடித் தொடர்பு ஏற்படுவது உறவை மேலும் மேம்படுத்த உதவும் என்றார்.
பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசிய கிலானி, நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதில் புதிய அரசு உறுதியாக உள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். பாகிஸ்தானின் அதிகாரமையமாக பாராளுமன்றம் விளங்க வேண்டும். என்பதற்கு புதிய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்றார் கிலானி.
இந்தச் சந்திப்பில் வெளியுறவு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் உயர் அதி காரிகள் பலரும் உடன் இருந்தனர்.