எரிபொருள் விலை அதிகரிப்பு , அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பவற்றைக் கண்டித்து காலியில் வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
காலி ஊருகஸ்மன்கந்திய பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்த்தனா, கஜந்த கருணாதிலக்க உட்பட ஐ.தே.க.அரசியல்வாதிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.கூறியதாவது;
உலகில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி இங்கும் அதன் விலையை அரசு அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு லீற்றர் பெற்றோலில் 57 ரூபா இலாபம் பெறும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையை உயர்த்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 110 அமைச்சர்களுக்கும் 168 ஆலோசகர்களுக்கும் தினமும் பெருமளவு பணம் செலவிடப்பட்டு வருகிறது. இது மக்கள் மீது சுமத்தப்படுகிறது.
அரசின் நாளாந்த செலவு ,ஊழல் மோசடிகளும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் வரையும் எமது போராட்டம் நாடு முழுவதும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விலை உயர்வைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.