* இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியுறும் பட்சத்தில் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் சுகவீனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்;
1997 ஆம் ஆண்டு அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக பி.ஈ.சி. பெரோ தலைமையிலான சம்பள ஆணைக்குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. நாம் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக தீர்வினை முன்வைத்தோம். எனினும் கடந்த 11 ஆண்டுகளாக எந்தவித முடிவுமின்றி பிரச்சினை தொடர்கிறது.
இந்நிலையில் இந்த சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் முகமாக 2007 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கல்வியமைச்சு இதற்குத் தீர்வு காணும் முகமாக இடைக்கால யோசனையை முன்வைத்தது.
இந்த இடைக்கால யோசனை இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது தீர்வு யோசனையிலிருந்து இறங்கி இடைக்கால யோசனையை நடைமுறைப்படுத்துமாறு நாம் கோரி கடந்த முறை உயர்தர பரீட்சை திருத்தும் பணியின் போது போராட்டங்களை நடத்திய போதும் எந்தவித கரிசணையுமற்று கல்வியமைச்சு இருந்தது.
இந்த நிலையில் எமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதையடுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தலைமையில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது வெற்றி பெறாத விடத்து எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.