* ஹெல உறுமய வலியுறுத்தல்
தெகிவளை முதல் கட்டுபெத்த குண்டுத்தாக்குதல் வரையிலான பயங்கரவாத செயற்பாடுகளின் மூலம் பலமான விடுதலைப்புலி வலையமைப்பொன்று கொழும்பில் காணப்படுகின்றமை தெளிவாக புலனாவதாக ஜாதிக ஹெலஉறுமய கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த விடுதலைப்புலிகளின் வலையமைப்பு பூண்டோடு அழிக்கப்படுவதற்கு பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் படையினரின் முன்நகர்வுகளை சகித்துக் கொள்ள முடியாத பிரபாகரன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
சிவிலியன்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களின் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவரின் தோல்வி வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படைவீரர்களிடம் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரபாகரன் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாக சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் படையினர் மீது மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாகவே விடுதலைப்புலிகள் சுதந்திரமாக தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேடுதல்கள், சுற்றிவளைப்புகள், வீடுகளை சோதனையிடல், விடுதிகளை சோதனையிடல் போன்ற நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.