*சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தல்
இலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல் விடுத்திருக்கிறது.
இலங்கையில் இரு பயணிகள் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றை விடுத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, விடுதலைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச சட்டத்திற்கு அமைய செயற்படவேண்டுமெனவும் பொது மக்களின் உயிருக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருக்கிறது.
வடக்கில் மோதல்கள் அதிகரித்து வருவதால் தெற்கில் வேண்டுமென்றே கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் இடம்பெறும் தன்மையையே அண்மைய தாக்குதல்கள் காட்டுவதாகவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது. அதேசமயம் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
வடக்கில் மோதல்கள் அதிகரித்து வருவதால், தனது படைகள் இலங்கையின் கடப்பாடுகளுக்கு அமைய சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக சகல தருணங்களிலும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மன்னிப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.