மசகெண்ணெய் விலை பரலொன்று 139 டொலராக அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடுகள் மானியங்களை குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சக்தி வளத்துறையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா நேற்று சனிக் கிழமை வலியுறுத்தியிருக்கிறது.
அதே சமயம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமது உற்பத்தி அளவு மட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வாஷிங்டன் கூறியுள்ளது.
உலக எண்ணெய்விலையானது கேள்விக்கும் நிரம்பலுக்கும் இடையிலான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் சாமுவேல் பொட்மான் கூறியுள்ளார். எண்ணெய் உற்பத்தியானது 2005 இலிருந்து நாளொன்றுக்கு 85 மில்லியன் பரல்களாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதே சமயம் பொருளாதார வளர்ச்சி குறிப்பாக, இந்தியாவினதும் சீனாவினதும் வளர்ச்சியானது முன்னொரு போதுமில்லாத அளவுக்கு எரிபொருளின் தேவையை அதிகரிக்க வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
8 கைத்தொழில் நாடுகளின் சக்தி வளத்துறை அமைச்சர்களின் மாநாடு ஜப்பானின் வடபகுதி நகரமான ஓமோரியில் நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, தென்கொரியாவின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் பொட்மான், ?கஷ்டமான நிலைமையில் நாம் இருக்கின்றோம். உற்பத்தியை இறுக்கமாக்கியிருக்கிறோம். அதேசமயம் உலகில் தேவை (எரிபொருள்) அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
எண்ணெய் விலை இரு நாட்களில் 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும். பொருளாதாரப் பாதிப்பானது குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்படும் பாதிப்பானது எண்ணெய் உற்பத்தியாளரையே தாக்கும் என்று பொட்மான் கூறுகிறார்.
அமெரிக்கா பொருளாதார ரீதியில் போராடுவதைப் பார்ப்பது எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு நல்லதல்ல. உலக பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விதத்தில் அவர்கள் எம்மில் தங்கியுள்ளனர் என்றும் பொட்மான் கூறியுள்ளார்.