*கிழக்கு நிலைவரம் குறித்தும் விசனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்தும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பொதுமக்கள் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையென வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஆழ ஊடுருவல் பிரிவுகளின் கிளைமோர்த் தாக்குதல் என்பனவற்றால் வன்னியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை கிரமமாக இடம்பெற்றுவருவதுடன் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் மீதான இத்தகைய கொலைகளை தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இதேபோன்று ஆண்கள், பெண்கள், சிறுவர்களென பொதுமக்கள் குறிப்பாக சிங்கள மக்களும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய தாக்குதல்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அதிகளவிலான துன்பங்கள் ஏற்படுவதுடன் மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வும் தோன்றியுள்ளது. இத்தகைய வன்முறைகள்யாவும் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென கோருகின்றோம்.
இதேவேளை கிழக்கு மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து கிழக்கில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சம்பவங்கள் தேவையற்ற விதத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே மோதலை ஊக்குவிக்கும். நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்துவதில் சட்டத்தை அமுலாக்கும் தரப்பு தவறியுள்ளமையானது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை ஊக்குவிக்கும்.
மறைமுக முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்ற கேள்விகளை தோற்றுவித்திருக்கிறது. வன்முறைகளிலிருந்தும் விலகி நிற்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு சகலரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் தொடர்ந்தும் ஒற்றுமையாக வாழவேண்டும். அத்தகைய ஐக்கியப்பாடானது அவர்களின் பொதுவான நலன்களுக்கு அத்தியாவசியமானதாகும். தம்மை பிரிக்க முயற்சிக்கும் விரும்பத்தகாத சக்திகளின் முயற்சிகளுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது.