*நாளை பாதுகாப்பு சபையைக் கூட்டுகிறார் ஜனாதிபதி
எம்.ஏ.எம்.நிலாம்
தலைநகர் கொழும்பிலும் மற்றும் தென்பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு மாற்று நடவடிக்கைகளைக் கையாள்வது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை உயர் பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் தீவிரமாக ஆராயவிருக்கின்றார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் கடந்த வாரம் அடுத்தடுத்துக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதும் அதனால் பெரும் இழப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டதும் அண்மைக்காலமாக அடுத்தடுத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதும் பாதுகாப்புத் தரப்புக்கு நெருக்கடிநிலையை உருவாக்கியிருக்கின்றது.
திடீர் சோதனைகள், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவது குறித்து பாதுகாப்புத் தரப்பு தீவிரமாக ஆராயவுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட்டிருப்பதால் நாளைய பாதுகாப்புச் சபைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வாராந்த பாதுகாப்புச் சபைக்கூட்டங்களைப் போன்றதல்லாமல் பாதுகாப்புத் தரப்பின் பல முக்கிய புள்ளிகள் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பதாகவும் நாளைய கூட்டத்தில் தலைநகரினதும் தெற்கின் ஏனைய பகுதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவிருப்பதாகவும் அறியவருகின்றது.
பாதுகாப்புத் தரப்பு அடுத்தவாரத்தில் தெற்கில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சில திட்டங்கள் நாளைய கூட்டத்தில் முன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சோதனைச் சாவடிகளை அமைத்து பலத்த சோதனைகள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையிலும், புலிகள் குண்டுகளுடன் தலைநகருக்குள் நுழைவது எப்படி என்ற சர்ச்சைக்குரிய கேள்வியொன்று பாதுகாப்புத் தரப்பில் எழுந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் அடுத்தடுத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதால் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தலை நகரிலும் சுற்றுப் புறங்களிலும் மிக இரகசியமான பாதுகாப்பு கிட்டி வருவதாக பாதுகாப்பு வட்டாரம் சந்தேகிக்கின்றது.
அடுத்த ஓரிரு வாரங்களுக்கிடையில் பாதுகாப்புத் தரப்பில் சில உயர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இவற்றினடிப்படையில் நாளைய பாதுகாப்புச் சபைக் கூட்டம் மிக முக்கியமானதாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அடுத்த ஓரிரு தினங்களுக்கிடையில் தெற்கின் நிலைமை மற்றும் கிழக்கில் உருவாகியுள்ள அசாதாரண நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அரச தரப்பிலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேச விருப்பதாகவும் இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாட்டின் நெருக்கடி நிலைகளை சீர்செய்யும் பொருட்டு பொது உடன்பாடொன்றைக் காண்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களில் ஜனாதிபதி முக்கியமான புத்திஜீவிகள் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த புதிய சூழ்நிலை உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரத்திலிருந்து தெரிய வருகின்றது.