இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ள அதிரடி வீரர் சனத் ஜெயசூரிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டிமெல் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்;
சனத் ஜெயசூரிய டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை. இந்த மாதம் பாகிஸ்தானில் ஆரம்பமாக இருக்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வீரர்களைத் தெரிவு செய்தபோது சனத்ஜெயசூரிய துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயற்படாததினால் அணியில் இணைக்கப்படவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற 2020 லீக் போட்டியில் சனத் ஜெயசூரிய தனது முன்னைய அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், அவரை இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சனத்ஜெயசூரிய ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவார் என்று அசந்த டி மெல் தெரிவித்தார்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இம்மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் லாகூர் கராச்சி நகரங்களில் பகல், இரவு ஆட்டமாக நடைபெறும். இப்போட்டியில் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் , ஐக்கிய அரபு , ஹொங்கொங் ஆகிய 6 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த 6 நாடுகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஏ பிரிவில் : இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு , பி பிரிவில்: இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
போட்டி அட்டவணை
ஜூன் 24 ஆம் திகதி: பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு. இப்போட்டி லாகூரில் நடைபெறும். இதேதினம் பாகிஸ்தான் எதிர் கொங்கொங், இப்போட்டி கராச்சியில் நடைபெறும்.
25 ஆம் திகதி: இலங்கை எதிர் பங்களாதேஷ் (லாகூர்)
இந்தியா எதிர் கொங்கொங் (கராச்சி)
26 ஆம் திகதி : இலங்கை எதிர் ஐக்கிய அரபு (லாகூர்) பாகிஸ்தான் எதிர் இந்தியா (கராச்சி)
மேற்படி போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் இரு அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டு 2 ஆம் சுற்று ஆட்டங்கள் 28 ஆம் திகதி நடைபெறும்.
28 ஆம் திகதி ; ஏபிரிவு , 2 ஆம் அணி எதிர் பி பிரிவு 2 ஆம் அணி (கராச்சி)
29 ஆம் திகதி: ஏ பிரிவு 1 ஆம் அணி எதிர் பி பிரிவு 1 ஆம் திகதி (கராச்சி)
30 ஆம் திகதி: ஏபிரிவு 1 ஆம் அணி எதிர் ஏபிரிவு 2 ஆம் அணி (கராச்சி)
ஜூலை 2 ஆம் திகதி: பிபிரிவு 1 ஆம் அணி எதிர் பிபிரிவு 2 ஆம் அணி (கராச்சி)
3 ஆம் திகதி: ஏபிரிவு 1 ஆம் அணி எதிர் பிபிரிவு 2 ஆம் அணி (கராச்சி)
4 ஆம் திகதி: ஏபிரிவு 2 ஆம் அணி எதிர் பிபிரிவு 1 ஆம் அணி (கராச்சி)
6 ஆம் திகதி : இறுதி ஆட்டம் (கராச்சி)