கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற இருக்கும் 2 ஆவது போட்டியில், இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை எதிர்த்து போட்டியிடும்.
இவ்இரு அணிகளும் முதல்நாள் பங்குபற்றி போட்டியில் தோல்வி அடையாத நிலையில் இருக்கின்றன. முதல்நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி, பூட்டான் அணியுடனான ஆட்டத்தை வெற்றி, தோல்வியின்றியும் (11) இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியுடனான ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றியும் (22) முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்று இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால்தான், அரை இறுதி ஆட்டத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்பை பெறக்கூடும்.
1995 ஆம் ஆண்டு இலங்கை அணியும், 2003 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியும் தெற்காசிய உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் இரு ஆட்டங்களும் வெற்றியின்றி முடிவு
கொழும்பில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான தெற்காசிய நாடுகளுக்கிடையிலான்ன உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் முதல் நாள் நடைபெற்ற இரு ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் பங்களாதேஷ், பூட்டான் அணிகள் போட்டியிட்டன. இப்போட்டி ஆரம்பமாகி முடிவடையும் வரை மிக விறுவிறுப்பாகவே இருந்தது.
இப்போட்டியின் ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியே வெற்றி பெறும் என்று அநேக ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். இப்போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் அணி ஒரு கோலைப் போட்டு இடைவேளையின் போது 10 கோலினால் முன்னணி வகித்தது.
இடைவேளையின் பின்பு 18 ஆவது நிமிடத்தில் பூட்டான் அணியும் ஒரு கோலைப் போட்டு சமநிலைப்படுத்தியது. இதன் பின்பு பூட்டான் அணி வீரர்களின் கையே ஓங்கியிருந்தது. இவ்வணியினர் பல கோல்களைப் போடும் கட்டங்களைத் தவற விட்டதினாலேயே ஆட்டம் இறுதியில் வெற்றி தோல்வியின்றி (11) முடிவடைந்தது.
இப்போட்டியில் இடைவேளைக்குப் பின்பு 6 நிமிடங்கள் மின்சாரம் இன்மையினால் ஆட்டம் தடைப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2 ஆவது ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியும் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்த போதிலும் இலங்கை வீரர்களின் வேகமான முன்னேற்றத்துக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஈடுகொடுக்க முடியாது திண்டாடிய வண்ணமே இருந்தனர்.
ஆனாலும், ஆட்டம் தொடங்கி 7 ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் கோல்காப்பு வீரர் விட்ட தவறினால் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது கோலைப் போட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நிமிடமே இலங்கை அணியின் தலைவர் சத்துர மதுரங்க மின்னல் வேகத்தில் ஒரு கோலைப் போட்டார் இடைவேளையின் போது இரு அணிகளும் தலா ஒரு கோலைப் (11) போட்டிருந்தனர்.
இடைவேளையின் பின்பு ஆட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களின் பின்பு ஆப்கானிஸ்தான் அணி 2 ஆவது கோலைப் போட்டு முன்னணி வகித்தது. இதன் பின்பு இலங்கை வீரர்கள் பல கோல்களைப் போடும் கட்டங்களை தவறி விட்ட போதிலும் 80 ஆவது நிமிடத்தில் வீரர் சன்னா பெனால்டி மூலம் 2 ஆவது கோலைப் போட்டார்.
ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களைப் போட்டமையினால் (22) ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இம்முறை இச்சுற்றுப் போட்டி மாலைதீவிலும் இலங்கையிலும் நடைபெற்று வருகின்றது. மாலைதீவில் கடந்த 3 ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகின்ற அன்றைய தினம் அங்கு நடைபெற்ற 1 ஆவது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி, நேபாள் அணியை 40 என்ற கோல்களினால் வெற்றி பெற்றது.
2 ஆவது ஆட்டத்தில் மாலைதீவு அணி பாகிஸ்தான் அணியை 30 கோல்களில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம்
இன்று 08 ஆம் திகதி சுகததாச விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் 1 ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பூட்டான் அணியை எதிர்த்துப் போட்டியிட்டும்.
2 ஆவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி போட்டியிடும்.