ஜேர்மனியிலுள்ள ஒரு பெண் தனது தோழிக்கு தபாலில் அனுப்பிய பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியில் (பார்சலில்) கவனக் குறைவாக அவரது செல்லப் பூனைக்குட்டியையும் சேர்த்து அனுப்பி விட்டார்.
இரண்டு நாட்களாக 500 கி.மீ. தொலைவுக்கு பார்சலில் பயணித்த அந்த பூனைக்குட்டிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜேர்மனியின் தெற்குப் பகுதியிலுள்ள ரோட்டச் எகர்ன் நகரில் கிட்டி ராட்ச் என்ற பெண் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு டொர்ஸ்டன் என்ற நகரிலுள்ள தனது தோழிக்கு சில பரிசுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்தார். இதற்காக அழகானதொரு அட்டைப் பெட்டியை தயார் செய்து அதற்குள் பரிசுப் பொருட்களை வைத்தார்.
கவனிக்காத நேரத்தில், அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனைக்குட்டி அந்த அட்டை பெட்டிக்குள் சென்று விட்டது. இதை அறியாத கிட்டி, அட்டைப் பெட்டியை மூடி, அதை தபால் மூலமாக தனது தோழிக்கு அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களுக்கு பின், 500 கி.மீ. தொலைவில் உள்ள அவரது தோழிக்கு பரிசுப் பொருள் அடங்கிய பார்சல் சென்றது. அதை வாங்கிப் பிரித்து பார்த்த அவர் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். அட்டை பெட்டிக்குள் ஒரு பூனைக்குட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
சத்தம் கேட்டதும், மெல்ல கண்விழித்து கொட்டாவி விட்டவாறு பெட்டிக்குள் இருந்து வெளியே குதித்து ஓடியது. ஆச்சர்யம் அடைந்த அவர், தனது தோழி கிட்டிக்கு இது குறித்து தெரிவித்தார். அப்போது தான், அட்டைப் பெட்டிக்குள் பூனைக்குட்டி இருந்ததை அறியாமல் அதைத் தபாலில் அனுப்பியது அவருக்கு தெரியவந்தது. இரண்டு நாட்களாக, பூனையின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.