* அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு
இந்நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் உரிய உரிமைகள், சலுகைகள் சம அளவில் வழங்கப்படாமையினாலே இன்று ஆயுதம் ஏந்திப் போராடி உரிமையை வென்றெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று நீதி அமைச்சரும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மல்வானை தேசிய சேவை சம்மேளனம் (N.கு.ஊ.) நடத்திய கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மல்வானை அல்முபாரக் தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
நாம் இந்நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று எந்த மதத்தை சார்ந்தவர்களாயினும் எந்தமொழி பேசுகின்றவர்களாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏன் ஐக்கிய தேசியக்கட்சி என எதுவாக இருந்தாலும் நீதிக்கு முன்னிலையில் சமம்.
ஆனால், இன்று இந்நிலை மாறிவிட்டது. இதனையே இன்று விளையாட்டுகள் மூலம் எமது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தலைமைத்துவப் பயிற்சி போன்றவற்றையும் அனுபவங்களையும் பெற்று நாளைய சமூகத்துக்கு நல்ல தலைவர்களாக உருவாக்க இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் மட்டுமல்ல பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற பகுதிகளிலும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்கருதி கல்முனையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலையானது கவலைக்குரியது.
அப்பகுதி மக்கள் கடல்கோளால் பாதிக்கப்பட்டதை நான் நேரடியாகச் சென்று பார்த்தவன். அவர்களின் அவலங்களை கேட்டு அறிந்தவன் என்ற வகையில் அவ்வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் பலமுறை இன்று அதனை தடுக்கும் பௌத்த பிக்குகளிடம் வேண்டினேன். இது பற்றி பலமுறை ஊடகங்கள் மூலமாகவும் அவர்களை தெளிவுபடுத்தினேன். ஆனால், இதனை இன்று வழங்க முடியாதவாறு எதிர்த்து பௌத்த பிக்குகள் தடுக்கின்றனர். நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் புத்த பெருமான் கூறும் ""மைத்ரி' என்ற அந்த அடுத்தவருக்கு உதவ வேண்டும் இரக்கப்பட வேண்டும் என்ற பதத்திற்கு மதிப்பளிக்கின்றேன்.
ஆனால், அந்த பிக்குகளிடம் இத்தன்மை இல்லை. இதனால் தான் அவர்கள் இதனை தடுத்துநிறுத்த முனைகின்றனர். இந்நிலைமையானது மாற்றமடைய வேண்டும்.
கரப்பந்தாட்டம் என்பது எமது நாட்டின் தேசிய விளையாட்டு. இதில் இன மத மொழி பேதமின்றி சகலரும் விளையாடுவது எமது தேசிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.
இது வரவேற்கத்தக்கது. இது போன்றே பிரச்சினைகளுக்கும் புரிந்துணர்வு மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
இங்கு கம்பஹா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் உரையாற்றுகையில் இன்று பாடசாலைகளில் பரீட்சைகளை நிறைவுசெய்த சுமார் 16 ஆயிரம் முஸ்லிம் மாணவர்களில் ஆயிரத்து 500 பேர் வரையே உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஏனைய மாணவர்கள் சிறந்த முறைகளில் வழிநடாத்தப்பட வேண்டும். இதில் விளையாட்டுகளும் பங்கு வகிக்கின்றன.
இல்லாவிடின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாக்கப்படும். எனவே எதிர்காலத்தில் நாம் இதுபோன்ற போட்டிகள் மூலமாக தேசிய ஒற்றுமையை வளர்க்க முற்பட வேண்டும்.