* ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார
""அமைச்சுப் பதவிக்கும், கோடிப் பணத்திற்கும் சலுகைகளுக்காக எனக்கு வாக்களித்த என் கட்சிக்காரர்களை கைவிட்டு கட்சி மாறும் எண்ணம் எனக்கில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நான் கடைசிவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரனாகவே இருப்பேன்' என புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார கூறினார்.
மாதம்பை நகரிலுள்ள புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.லெரின் பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஐயூப்கான், சுதத்சந்திர சேகர, முன்னாள் அமைச்சரான. பெஸ்டஸ் பெரேரா, திருமதி.ஹெரல் ஹேரத், கட்சியின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.ரபாத் அமீன், புத்தளம் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.இப்திகார் முகம்மட் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார கூறியதாவது;
"என்றுமில்லாதவாறு இன்றைய ஆட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளாகியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் மலைபோல் உயர்வடைந்து செல்கின்றது. இதனால் உழைக்கும் வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு மாதத்திற்காகப் பெறும் சம்பளத்தில் இன்று ஒரு வாரத்தைக் கூட நகர்த்திக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் பசி பட்டினியால் சிரமப்படுகின்றனர்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இவ்வாறான வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றமே காரணம் என்று கூறுகின்றனர். இன்று நாட்டில் வீண் விரயங்களும், ஊழல் துஷ்பிரயோகங்களும் மலிந்து விட்டன. இந்நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கும் இந்த துயரத்திற்கு இவ்வாறான வீண் விரயங்களும் ஊழல் மோசடிகளுமே காரணமாகும். மக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளித்துக் கொள்ள முடியாது திண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்நாட்டுக்கு எவ்வகையிலேனும் பொருத்தமற்ற அமைச்சுகளை ஏற்படுத்தி அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.
இந்நாட்டு மக்களிடத்தில் செல்வாக்கை இந்த அரசு தினம் தினம் இழந்து வருகின்றது. மக்களை பெரும் திண்டாட்டத்திற்குள்ளாக்கியுள்ள இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கெதிராக நாம் வீதிப் போராட்டங்களை நடத்தவுள்ளளோம்'
இக்கூட்டத்தில், புத்தளம் மாவட்டத்தின் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.