* எம்.ஏ.எம்.நிலாம்
ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த பத்து வருடங்களுக்கு அதிகாரத்துக்கு வரமுடியாதென ஆரூடம் கூறியிருக்கும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஆட்சியைக் கவிழ்க்கும் ஐ.தே.க., ஜே.வி.பி.யின் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
இது ஜூலை மாதமாகும். எமது நாட்டைப் பொறுத்தமட்டில் நாம் இரண்டு கறுப்பு ஜூலைகளைச் சந்தித்திருக்கின்றோம். முதலாவது 1980இலும் அடுத்தது 1983இலும் ஆகும். கறுப்பு ஜூலைக்கு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
கறுப்பு ஜூலைகளுக்கு காரணமாக இருந்த இரண்டு கட்சிகள் இன்று மக்கள் துயர் நீக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. எதிரணியிலிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் துயர் பற்றிப் பேசுவதற்கு தகுதியே கிடையாது.
வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் மக்களை ஏமாற்றும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளன. மக்கள் அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலும் மக்களின் ஆணை அரசுக்கே கிடைக்கும்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகம், யாழ். குடாநாட்டுக்கான ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதனை வரவேற்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆதரவாளர்கள் பெருந்தொகையினர் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர் எனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு