* ஐ.தே.க. குற்றச்சாட்டு
-எம்.ஏ.எம்.நிலாம்-
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஓய்வுபெற்ற பின்னரும் அரசினால் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரகிருதிகள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த ஆணைக்குழுக்களால் நாட்டுக்கு எந்தச் சேவையும் இடம்பெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல அரசு மீதான மேற்கண்ட குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
இன்று சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு செயற்படுவதாகத் தெரியவில்லை. அது ஜனாதிபதியினதும் சுதந்திரக் கட்சியினதும் வால்பிடிப்போரின் கூடாரமாக மாறியுள்ளது. இக்குற்றச்சாட்டை சுமத்த நான் பயப்படவில்லை. பொலிஸாரின் செயற்பாடுகள் நேர்மையானதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்மானங்களின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படும் பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றோம். மகிந்த ராஜபக்ஷ அரசு என்ன விளையாட்டுக் காட்டினாலும் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாகும்போது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டும். அதற்கப்பால் இந்த அரசு செயற்படமுடியாது. ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலின்போது இந்த விளையாட்டுகளுக்கு இடம்கிட்டாது. இந்த நாட்டின் அடுத்த அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி அரசே ஆகும். 2010 வரை எந்தத் திருகுதாளத்தையும் செய்யுங்கள் உங்களைப் பற்றிய விரிவான அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் எமது ஆட்சியில் அவர்களுக்குரிய தீர்ப்பை நாம் வழங்க பின்னிற்கமாட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொலிஸாரின் உதவி தேவைப்படாது. ஆனால், அனைத்து பொலிஸாரிடமும் நாம் கேட்பது நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுங்கள் தவறினால் அதன் பிரதிபலன்களை நீங்கள் அனுபவித்தே ஆக நேரிடலாம்.
இந்த நாட்டுக்கும் அரசியல் தலைவர்களுக்குமாக வாழ்வின் பெரும் பகுதியை தியாகம் செய்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு கலாவௌ பகுதியில் பெரிய தோட்டங்கள் கிடையாது. அவர் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த நபரைப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னரும் கூட வீட்டுரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதிசயம், என்னவென்றால் முறைப்பாட்டாளர் குற்றவாளியாகக் காட்டப்பட்டிருப்பதுதான்.
நாம் தயாரிக்கும் பட்டியலில் அநுராதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஜானக பெரேராவுக்கு ஆதரவான சகலரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டிருக்கின்றார். விரைவில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். அப்போது நாமும் சில தீர்ப்புகளை வழங்க நேரிடலாம்.
முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவுக்கு முப்படையின் பொலிஸாரின் 100 பேர் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட வழங்கப்படவில்லை.
ஜனாக பெரேராவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. அவருக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டி வரும். ஜனாதிபதியும் பாதுகாப்புக்குப் பொறுப்பான ராஜபக்ஷ சகோதரர்களும் பதிலளிக்க நேரிடும் என்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம்.