* அமைச்சர் சந்திரசிறி கஜநாயக்க
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது என அரச நிர்வாக மற்றும் உள்விவகாரத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜநாயக்க தெரிவித்தார்.
வடமத்திய மாகாண சபை வேட்பாளர் ஜயலத் பண்டார ஒழுங்கு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அநுராதபுரம் ரத்னாயக்கபுர பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஜனாதிபதி என்னை இரத்தினபுரி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பணித்தபோதும் நான் அநுராதபுர பகுதிக்குப் போகிறேன் எனக் கூறி இப்பிரதேசத்தைப் பொறுப்பெடுத்தேன். அநுராதபுர பகுதி எனக்கு என்றும் விருப்பமான பகுதி என்பதாலேயே நான் இம்முடிவை எடுத்தேன்.
மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெற்றதும் எந்த ஒரு சேவையையும் செய்யாதிருக்கும் அரசியல்வாதிகளை மீண்டும் வாக்காளர்கள் தெரிவுசெய்யக்கூடாது. சிறப்பான முறையில் சேவையாற்றக்கூடிய மக்கள் தலைவர்கள் உருவாவதையே ஜனாதிபதி தலைமையிலான எமது கட்சி விரும்புகின்றது.
ஜாதிக சவிய, மகநெகும, கமநெகும திட்டங்களின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பல அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கிராமங்களை அபிவிருத்தி செய்வதினூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது அரசின் நோக்கம். அது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பொதுமக்கள் காட்டிக் கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறுவகையிலும் பின்னடைவான நிலையிலுள்ளது. கட்சியை நம்பிய பிரதேச அரசியல்வாதிகள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலர் நிர்க்கதியான நிலையிலுள்ளனர். இவ்வாறான பலர் எம்முடன் இணைந்து வருகின்றனர். இன்றும் விலச்சி பகுதியிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை நாம் நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொள்கின்றோம். எந்தக் கட்சியின் ஆதரவாளர்களாயினும் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகளே.
மக்கள் விடுதலை முன்னணிக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், பிளவுகளை மூடிமறைக்கவே அக்கட்சி வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட முற்படுகின்றது. எனினும், இந்நாட்டு மக்கள் ஜே.வி.பி.யை நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர். எனவேதான், அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தமும் படுதோல்வியடைந்தது. அரசின் மீதும் ஜனாதிபதியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரப்படுகின்றது. வேலை செய்ய முடியாதவர்கள் இதைத்தான் செய்வார்கள். ஜனாதிபதியையும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்மார்களையும் பற்றி மக்கள் அறிவார்கள். 24 ஆம் திகதியாகும் போது எம்மீது எவ்வளவு தூரம் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தெரியவரும். நாம் வடமத்திய, சப்பிரகமுவ மாகாண சபைகளில் அமோக வெற்றியீட்டுவோம் என்றார்.