*விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர் பார்த்து நிற்கும் வேளையில் கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை குழப்பும் வேலைகளில் ஒரு போதும் ஈடுபட மாட்டோமென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டேலீடர்' வார இதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;
"தென்பகுதித் தாக்குதல்களை நாம் நடத்தவில்லை. ஒரு போதும் பொது மக்களை நாம் இலக்கு வைப்பதில்லை. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் படைத்
தரப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் முகவர் நிறுவனங்களும் பாரியளவு வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் போர் முடிவுக்கு வருவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
இவ்வாறானவர்களே துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி இழி செயல்களை மேற்கொண்டு போர் தொடர்வதை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதும் இந்த அரசு போர் தொடுத்துள்ளது.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கு ஓர் குழு இயங்கி வருகின்றது. மேர்வின் சில்வா போன்றோர் இந்தக் குழுவின் முக்கிய நபர்களாகவுள்ளனர். அரசியல் ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்கள மக்களைக் கொன்று குவிப்பதற்கு கூட இவர்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
தென்பகுதியில் நாம் தாக்குதல் நடத்துவதாக எந்தவொரு ஆதாரமுமின்றி சர்வதேசம் எம் மீது எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். ஆனால், எமது பகுதியில் அரச படையினரே தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
சர்வதேச நாடுகள், ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்த ஆதாரங்களை அம்பலப்படுத்த நாம் தயாராயுள்ளோம்.
நாம் ஆயுதங்களை கீழே வைத்தால் பேச்சுக்கு தயாரென ஜனாதிபதி கூறியுள்ளார். 30 வருடங்களுக்கு முன் எம்மக்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை கையிலெடுத்தோம். ஜனாதிபதியின் பொறுப்புணர்ச்சியற்ற வேண்டுகோளுக்காக நாம் எமது மக்களைக் காப்பாற்றும் தலையாய கடமையிலிருந்து விடுபடுவதற்கு தயாரில்லை. நிபந்தனையற்ற சூழ்நிலையிலேயே சமாதான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அரசின் சர்வ கட்சிக் குழுவின் கூட்டம் என்பது மற்றுமொரு ஏமாற்று நாடகமாகும். சர்வதேசத்தை ஏமாற்றவே அரசு இதனை முன்னெடுக்கின்றது. இந்தக் குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒரு போதும் தீர்வாக அமையாது.
கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை குழப்புவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. நாம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திர போராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறான நிலையில் சார்க் மாநாட்டை குழப்புவதற்கு ஒரு போதும் முயற்சிக்க மாட்டோம்.'
மரபு ரீதியான போர் ஆற்றலை நாம் இழந்து விட்டதாக அரசு போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் இவ்வாறான போலி பிரசாரங்களையே முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால், அனைத்துக் காலங்களிலும் நாம் எமது மரபு ரீதியான போராற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளோம். களநிலைமைகளுக்கு ஏற்ப நாம் மாறுபட்ட அணுகுமுறைகள் தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றோம்.