இலங்கையிலிருந்து சென்று பிரிட்டனில் புகலிடம் கோரியிருக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த ஒரு வயதுக் குழந்தை மீது தொலைக்காட்சிப்பெட்டி விழுந்ததால் அக்குழந்தை இறந்துவிட்டது.
ஸ்வான் சீ, பென்லான் பகுதியிலுள்ள ஹியோல் பிராவ் எனுமிடத்திலேயே இந்தப் பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காஸி ரியாஸ் முகமட் என்ற குழந்தையே இறந்துள்ளது. இக்குழந்தையின் பெற்றோர் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு வந்து புகலிடம் கோரியிருப்பவர்களாகும். இவர்களுக்கு வேறு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இது மிகவும் துன்பகரமான விடயம். தொலைக்காட்சிப் பெட்டி குழந்தை மீது விழுந்ததாலேயே அக் குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினர் எனக்கு கூறினர் என்று அக்குடும்ப நண்பரான பாதியா நூர் என்பவர் "டெய்லி மெய்ல்' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அக் குடும்பம் கலங்கிப் போயிருப்பதாகவும் நானும் இரவு முழுக்க அழுதேன் என்று அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 3.01 அளவில் அம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வாகனம் அந்த வீட்டுக்குச் சென்றபோது 3.06 மணியாகும். ஆனால் மொறிஸ்ரன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுகையில் பிள்ளை நினைவற்று இருந்ததாகவும் மூக்கால் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாகவும் அம்புலன்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு பேச்சாளர் கூறியுள்ளார்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக தென் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பொலிஸார் கூறியுள்ளனர்.