மன்னாரில் விடுதலைப்புலிகள் வசமிருந்து இலுப்பைக்கடவை பகுதியையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் பூநகரி வீதியில் விடத்தல்தீவுக்கு அப்பால் 10 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் இலுப்பைக்கடவை பகுதியே நேற்றுக் காலை முழுமையாகக் கைப்பற்றப்பட்டதாகவும் படைத் தரப்பு கூறுகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடற்புலிகளின் முக்கிய கோட்டையான விடத்தல்தீவை கைப்பற்றிய படையினர் தற்போது மன்னார் பூநகரி வீதியில் மற்றொரு கேந்திர முக்கிய இடமான இலுப்பைக்கடவையைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு இந்தப் பிரதேசத்தை அதிரடிப்படை 01 ம் 57 ஆவது படையணியும் சுற்றி வளைத்த நிலையில் நேற்றுக் காலை இலுப்பைக்கடவையை முற்றாகக் கைப்பற்றியதாகவும் படையினர் தெரிவித்தனர்.
தற்போது படையினர் இலுப்பைக்கடவையையும் தாண்டி மன்னார் பூநகரி வீதியில் இரு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
இதுபற்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், வடமேற்கு கரையோரத்தில் விடுதலைப் புலிகள் வசமிருந்த மற்றொரு முக்கிய தளத்தையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். எனினும் இது கடற்புலிகளின் தளமல்ல.
கடந்த தசாப்தங்களாக இந்தப் பகுதியைப் புலிகள் தங்களது வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.