புலிகள் இயக்கத்தினராலும் ஆதரவாளர்களாலும் கடந்த ஜூலை 12 ஆம் திகதி லண்டனில் நடத்தப்பட்ட ""பொங்குதமிழ்' எனப்படும் விழாபற்றி பல்வேறு முக்கிய பிரிட்டிஷ் ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தமான மேற்படி ஊடக விமர்சனங்கள் லண்டனில் பயங்கரவாதத்துக்குச் சார்பாக நடத்தப்பட்ட பகிரங்க நிகழ்வு என்ற தொனியிலேயே அமைந்துள்ளதுடன் அவற்றை பிட்டிஷ் அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஸ்ரீலங்காவில் இயங்கும் பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானிக்கப்பட்டு சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி "பொங்கு தமிழ்' விழா லண்டனில் வாழும் புலிகள் இயக்கத்தினராலும் ஆதரவுப் பிரமுகர்களாலும் லண்டனின் மத்தியில் பகிரங்கமாக நடத்தப்பட்டதாகவும் இந்த விழாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் பிரபாகரன் படங்களையும் புலிகள் இயக்க வாசகங்களையும் கொண்ட பதாதைகள், கொடிகள், சுலோக அட்டைகளுடன் புலிகளின் ஆதரவாளர்கள் முன்னணி வகித்துச் சென்றுள்ளனரெனவும் இந்த விழாவும் ஊர்வலமும் கூட்டமும் புலிகள் இயக்கத்தின் பிரசார நிகழ்வுகளாக அமைந்துள்ளதாகத் தெளிவாகக் காணமுடிந்ததாகவும் ஆயினும் இவ்வாறு பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குப் பிரசாரம் செய்ய அனுமதிக்கும் அளவுக்கு பிரிட்டிஷ் அரச நிர்வாகம் பாராமுகமாக இருந்துள்ளதெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் இயக்கத்தின் இந்த "பொங்கு தமிழ்' விழாவில் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவித்திருக்கும் மேற்படி லண்டன் சர்வதேச ஊடகங்கள் இவ்வாறு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் விழாவில் கலந்து கொண்டதன் மூலம் குறித்த ஐந்து பிரிட்டிஷ் எம்.பி.க்களும் கலந்து கொண்டிருப்பது தமது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் எதிரான செயல் எனக் குறிப்பிட்டுள்ளன.
மேலும் புலிகளின் "பொங்குதமிழ்' விழாவில் கலந்து கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளில் பிரிட்டிஷ் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை மேற்படி லண்டன் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறு ஆளும் கட்சியாகிய லேபர் கட்சியைச் சேர்ந்த வீரேந்திர ஷர்மா, சிபான் மெக் டொனான், டொன்பட்லர் ஆகிய பிரபலமான பாராளுமன்றப் பிரதிநிதிகளும், கொன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதி அன்ரூ பெலிங், லிபரல் டெமோகிறரிக் கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதி எட்சேவி ஆகிய ஐவருமே பொங்குதமிழ் விழாவில் பகிரங்கமாகக் கலந்து கொண்டவர்கள் ஆகும்.
மேலும் லண்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவல்களில் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்ரீலங்கா நாட்டுத் தமிழர்கள் சுமார் மூன்று இலட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் எவ்வாறாயினும் மேற்படி பொங்கு தமிழ் விழாவில் புலிகள் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் உட்பட 8000 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர் எனவும் இது அங்கு வாழும் தமிழர்களின் 3%க்கும் குறைவான மக்களே எனவும் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 20.07.2008