ஸ்டான்போர்ட் டெனிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
"பாங்க் ஒவ் தி வெஸ்ட் டெனிஸ்' போட்டி கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள சுவிற்சர்லாந்தின் பட்டி ஸ்க்னைடருடன் மோதினார் செரீனா. இப்போட்டியில் 63, 61 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா.
7.2 கோடி ரூபா பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அவர். அரையிறுதியில் கனடாவைச் சேர்ந்த அலெக்சாண்டரா வொஸ்நியக்குடன் மோதவுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியுற்ற செரீனா, ஸ்டான்போர்ட் போட்டியில் எப்படியாவது பட்டம் வெல்லவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஸ்லோவாக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜப்பான் வீராங்கனை சுகியாமா.