டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமென்பதே தனது கனவென்று இலங்கை அணியின் புதிய ஹீரோ மென்டிஸ் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலக்கிய இலங்கை இளம் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு ஓவரில் 5 விதமாக பந்துவீசி மிரட்டும் மென்டிஸ், தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான பந்துவீச்சு முறையையும் கற்று வருகிறார். 23 ஆம் திகதி இந்திய இலங்கை அணிகளிடையே கொழும்பில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவரது "மாயாஜாலம்' தொடருமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் மென்டிஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்துவது கனவு நிறைவேறுவது போன்றதாகும். அதுவும் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள லாராவின் உலக சாதனையை முறியடிக்க நெருங்கியிருக்கும் இந்த சூழலில் அவரது விக்கெட்டை கைப்பற்றுவது மேலும் சிறப்பானதாயிருக்கும். லட்சுமண், டெண்டுல்கர், ராவிட், கங்குலி போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பந்துவீச மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
பந்துவீச்சில் புதிதாக மேலும் என்ன வித்தியாசத்தை காட்டப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அதை நீங்கள் போட்டியில் பாருங்கள். ஒரு நாள் போட்டியில் எப்படி பந்து வீசினேனோ அதே யுக்தியை தான் டெஸ்டிலும் கடைப்பிடிப்பேன். அதில் பெரிய மாற்றமிருக்காது. எனது பந்துவீச்சு கடவுள் கொடுத்த பரிசு. தவிர, எனது பாடசாலைப் பயிற்சியாளர் மூலம் நான் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முரளிதரன் எனக்கு முன்னோடி. அவருடன் இணைந்து பந்து வீசுவது சிறப்புக்குரியது. அவர் தொடர்ந்து எனக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். எந்தநேரமும் தன்னிடம் ஆலோ சனை கேட்கலாமென்று கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.