பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை இப்பகுதியில் இந்தளவுக்குக் கூடியிருப்பது அந்நாட்டு அரசாங்கத்திற்கு கவலையளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க இராணுவம் தாக்குதலைத் தொடங்கியதும் தலிபான்கள் ஆட்சியை விட்டு தப்பி ஓடினார்கள். இவ்வாறு ஓடியவர்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் மலைபாங்கான பகுதிக்குள் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளாவர்.
இவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியாமல் இருந்தது. இப்போது அரசு அதிகாரிகள் இவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என்று கணக்கிட்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜாவர் ஆகிய பகுதிகளில் தான் வசித்து வருகிறார்கள்.
வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்கள் தங்கள் முகவர்களை தலிபான் மற்றும் அல்ஹைடா தீவிரவாதிகள் வேடத்தில் பாகிஸ்தானுக்குள் அனுப்பி வைத்துள்ளனர் என்ற தகவலும் பிரதமர் கிலானியிடம் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பிரச்சினை பற்றி ஆலோசிப்பதற்காக பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும் கலந்துகொண்டார். பிரதமர் கிலானியுடன் அவரது முக்கிய அமைச்சர்களும் பெஷாவர் நகருக்கு செல்வார்கள் என்றும் அங்கு அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வெளிநாட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது பற்றி தலிபான் தரப்பில் கூறப்பட்டபோது, வெளிநாட்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை சில நூறுதான் இருக்கும் என்று தெரிவித்தனர்.