* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்
தெரிவிப்புமலையக மக்கள் அரசியல் ராஜதந்திரம் புரிந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது உறுதிப்பாட்டையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தி மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டிச்சின்ன வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவத்தை கட்சிப்பணிமனையில் நடைபெற்ற அமைப்பாளர்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாதர், இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த மேற்படி கூட்டத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது;
"வடகிழக்கு யுத்தம் இன்று நாடெங்கும் பரவியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களும் கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளன. அதிலும் வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாத தோட்டப்புற மக்களின் சோகங்கள் ஏராளம். எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தோட்டத் தொழிலாளர்கள் தொழில், வேதனம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என்ற ரீதியில் மிகவும் இம்சிக்கப்பட்டு தள்ளப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நமது வாக்குகளை தேர்தல் காலங்களில் சிதறவிட்டு யார் யாருக்கோ வாக்களிப்பதே ஆகும்.
"நமக்கு நம்மவர்களே' என்ற உணர்வும் சமூகப் பற்றும் ஏற்பட வேண்டும். நமது பிரதிநிதித்துவங்களை பறிகொடுக்க முடியாது. மலையக மக்கள் முன்னணியின் வெற்றியின் மூலம் ஒருமைப்பாட்டை எல்லோருக்கும் உணர்த்தவேண்டும்.
சமூக ஒற்றுமையைப் பற்றி அறிக்கை விடுவதோடு நின்று விடுவோருக்கும் சுயநலப்போக்கில் மலையக மக்களை கூறுபோட்டு அரசியல் நடத்த நினைப்பவர்களுக்கும் இரத்தினபுரி மக்களின் தீர்ப்பு ஒரு பாடமாக அமையவேண்டும்.
இரத்தினபுரி மக்களின் அபிலாசைகளைக் கடந்த காலங்களில் புரிந்துகொள்ளாதவர்கள் இப்போது தேர்தல் காலத்தில் ஆதாயம் தேடுவதற்காக தோட்டப்புறங்களுக்கு படை எடுத்துள்ளார்கள். பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மலையக மக்களின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைப் போல இரத்தினபுரி மாவட்டத்திலும் மாற்றமும் புதிய அரசியல் மறுமலர்ச்சியும் ஏற்படுதல் வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு தடையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் சொந்தக்காரர்கள் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்வியல் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பதை ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் புரிந்துகொள்ளவேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களை, அதை ஏற்படுத்தியவர்களை இனியும் நம்பி வாக்களிப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமமாகும்.
சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் அடிமட்ட நிலையிலிருக்கும் தோட்டப்புறங்களுக்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்கு ஏதுவாக இரத்தினபுரி மாவட்டத்தில் ம.ம.மு. வேட்பாளர்கள் வெற்றிபெறுவது அவசியமாகும்' என்றார்.